உழவுக்கு எப்போதும் குறையாமல் பணம் இருக்க வேண்டும்.. விவசாயிகள் அதற்காக சிரமப்படக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் கிசான் கிரெடிட் கார்டு (KCC). இதன் மூலம் விவசாயிகளின் தேவைகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் கிசான் கிரெடிட் கார்டு மூலம் ஏராளமான விவசாயிகள் கடன் பெற்றிருக்கின்றனர். இந்நிலையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்த திட்டத்தில் ஒரு சில புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இவை எப்போது அமலுக்கு வரவுள்ளது?, இதனால் விவசாயிகளுக்கு என்ன பயன்? என்ற விவரங்களை பார்ப்போம்.
புதிய விதியின் நோக்கம் என்ன?: இதுவரையில் கிசான் கிரெடிட் கார்டு வழங்கி வந்த வங்கிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான விதிகளையும், காலக்கெடுவையும் வைத்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் வர இருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடன் சரியான நேரத்தில் எந்தவித தாமதமும் இன்றி எளிதாக கிடைக்கும்.
புதிய விதிகள் 2027-ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் எளிதில் கடன் பெற வேண்டும் என்பதற்காகவும், சரியான நேரத்தில் கடன் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.

முன்பெல்லாம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வங்கிகள் குறிப்பிட்ட காலத்தை வழங்கும். அதாவது கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றால் வங்கிகள் நிர்ணயிக்கும் காலத்திற்குள் கடனைக் கட்ட வேண்டும். இப்போது புதிய விதிகளின் படி, பயிர் விதைப்பதில் தொடங்கி, அறுவடை செய்து அதை மார்க்கெட்டில் கொண்டு விற்பனை செய்து பணம் பார்க்கும் வரை பயிர் காலம் என கணக்கிடப்படும். அதன் பிறகு கடனை திருப்பிச் செலுத்தலாம். ஏனெனில் விவசாயிகளுக்கு பயிர் அறுவடை முடிந்தவுடன் கையில் பணம் வந்துவிடாது. இதை கருத்தில் கொண்டு தான் இந்தப் புதிய மாற்றம். கடந்த பிப்ரவரி மாதம் இதுபோல கிசான் கிரெடிட் கார்டு லோனில் மாற்றத்தை கொண்டு வருவதாக RBI ஒரு அறிக்கையை வெளியிட்டது. விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் வங்கிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அவர்கள் கொடுத்த ஆலோசனை மற்றும் கருத்துக்களை நன்றாக பரிசீலனை செய்த பிறகு இந்த புதிய கொண்டு வரப்படவுள்ளது.
பிணையமில்லாக் கடன்: கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பிணையமில்லாத கடன் வழங்கப்படுகிறது. தற்போது விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வதற்கு ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு எந்த வித பிணையமும் வழங்கத் தேவையில்லை. அதே போல இதற்கென தனி மார்ஜின் தொகை எதுவும் விவசாயிகள் செலுத்த வேண்டியதில்லை.
அதுவே ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான கடன் தொகைக்கு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் வங்கிகளின் சொந்தக் கடன் கொள்கைகளின் அடிப்படையில் பிணையம் மற்றும் மார்ஜின் தொகையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பயிர்கள் அல்லது பிற விவாசாய பொருட்களை ஈடாக வைத்து கடனைத் திருப்பிச் செலுத்தும் பட்சத்தில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிசான் கிரெடிட் கார்டு கடனுக்கான உண்மையான வட்டி விகிதம் 7 சதவீதமாகும். ஆனால் நீங்கள் கடனை முறையாகவும், சரியான நேரத்திலும் திருப்பிச் செலுத்தினால் அரசு வட்டி மானியம் மற்றும் ஊக்கத்தொகை போன்ற பல விஷயங்களை வழங்குகிறது. இதனால் உங்களுக்கான வட்டி வெறும் 4 சதவீதமாகக் குறையும். 2027 ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் எந்தவித தாமதமும் இன்றி கடன் பெற முடியும்.


Click it and Unblock the Notifications