மத்திய அரசு, ஏற்கனவே போதுமான வருவாய் இல்லாமல் போராடிக் கொண்டு இருந்தது. இந்த 2020 - 21 நிதி ஆண்டின் தொடக்கமே கொரோனா வைரஸ் வேறு வந்துவிட்டதால், ஒட்டு மொத்த நிதி நிலைமையும் மோசமாகிக் கொண்டே போகிறது.
இந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, 23 அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று, கணிசமாக பணத்தை திரட்டும் வேலையில், அரசு மும்முரமாக செயல்படுவதாகச் சொல்லி இருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இப்போது புதிதாக மத்திய ரிசர்வ் வங்கியும், தன் பங்குக்கு ஒரு சில முக்கியமான ஆலோசனைகளைச் சொல்லி இருக்கிறார்கள். அது என்ன? வாருங்கள் பார்ப்போம்.
26 % பங்குகள் போதும்
கடந்த வாரத்தில், மத்திய ரிசர்வ் வங்கி போன்ற முக்கியமான அமைப்புகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு ப்ரசண்டேஷனைக் காட்டி இருக்கிறார்களாம். அதில், அரசுக்கு ஒரு முக்கியமான பரிந்துரையைச் செய்து இருக்கிறது ஆர்பிஐ. மத்திய அரசு, அரசு பொதுத் துறை வங்கிகளில் 26 % பங்குகளை வைத்துக் கொண்டால் போதும் என பரிந்துரைத்து இருக்கிறார்களாம்.
தற்போதைய நிலை என்ன
மத்திய அரசு தற்போது, அரசு வங்கிகளில் சுமாராக 50 சதவிகிதத்துக்கு மேல், பங்குகளை தன் வசம் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி மத்திய அரசு, தான் வைத்திருக்கும் பங்கை குறைத்தால், அரசு வங்கிகளை இன்னும் முறையாக (Professional) நடத்த முடியும் எனச் சொல்லி இருக்கிறார்களாம்.
வங்கித் தலைவர்கள்
அரசு வங்கிகளின் பங்குகளை குறைப்பது போல, அரசு வங்கித் தலைவர் பதவிகளான நிர்வாக இயக்குநர்கள் & முதன்மைச் செயல் அதிகாரிகள் போன்ற பதவிகளுக்கு, 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் பதவிக் காலமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் ஒரு நல்ல கோரிக்கையை வைத்து இருக்கிறது ஆர்பிஐ.
சம்பளம் அதிகரிக்க வேண்டும்
வெறுமனே, அரசு வங்கிகளின் தலைவர் பதவிகளுக்கு பதவி காலத்தை நீட்டித்தால் போதாது. இந்த பதவிகளில் இருப்பவர்களின் சம்பளத்தையும் தனியார் வங்கிகளுக்கு நிகரான அளவுக்கு உயர்த்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்து இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. அரசு இதை செயல்படுத்துமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
கலந்து கொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், இந்தியாவின் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் அமைப்பான செபியின் தலைவர் அஜய் தியாகி, இந்திய இன்சூரன்ஸ் துறையை நெறிமுறைப்படுத்தும் ஐ ஆர் டி ஏ ஐ சார்பாக எஸ் சி குந்தியா போன்றவர்கள் வீடியோ கான்ஃபிரன்சிங் முறையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்களாம்.