கொரோனாவால் நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனலாம். அதிலும் சாமானியர்களின் நிலை மிக மோசமாக உள்ளது என்றே கூறலாம்.
முடங்கிபோன தொழில்கள், பொருளாதாரம், வேலை என பலவற்றிற்கும் மத்தியில், இன்று ஒன்றே ஒன்று அவர்களுக்கு கைகொடுக்கிறது என்றால் அது நகைக்கடன் தான்.
இந்த நிலையில் நகைக்கடனுக்கான சலுகையினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
ஆபத்பாந்தவனாக உதவும் தங்கம்
நிலையற்ற பொருளாதார நிலையில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு, இன்று அவசர காலத்திற்கு ஆபத்பாந்தவனாக உதவுவது தங்கம் தான். ஏனெனில் கேட்டவுன் குறைந்த நேரத்தில் கேட்ட பணம் கிடைக்குமெனில் அது தங்கத்திற்கு தான். அதிலும் நாளுக்கு நாள் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் மீதான கடன் அளவும் அதிகரித்து வருகிறது.
ரிசர்வ் வங்கி 90% கடனுக்கு அனுமதி
இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கை மூலம், தங்க நகைகளின் மதிப்பில் இனி 90% வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இது முன்னர் 75% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா நெருக்கடியினால் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு நிவராணம் அளிக்கும் வகையில், மத்திய வங்கி loan-to-value மதிப்பினை அதிகரித்துள்ளது.
இது இனி அதிக கடன் வாங்க அனுமதிக்கும்
மத்திய வங்கியின் இந்த தளர்வானது மார்ச் 31, 2021 வரை செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முன்பை விட தற்போதுள்ள தங்கத்தினை வைத்திருப்பதற்கு எதிராக, குடும்பங்கள் அதிக கடன் வாங்க அனுமதிக்கும். இதன் மூலம் குடும்பங்கள் அதிக நிதியைப் பெற முடியும். இதன் மூலம் அதிக பணப்புழக்கத்தினை பெற விற்கும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்படுவதில்லை.
இது நல்ல முடிவு தான்
மைலோன்கேர் தலைமை மூலோபாய அதிகாரி ஷாலினி குப்தா கூறுகையில், தங்க கடன்களுக்கான எல்டிவியை 75 சதவீதத்திலிருந்து, 90 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கி எடுத்த இந்த முடிவானது சரியான நேரத்தில் தான் வந்துள்ளது. தற்போதுள்ள இந்த நெருக்கடியான நிலையில், எந்தவொரு கடனையும் பெற முடியாமல் தவிக்கும் வணிகர்களுக்கும் சிறு கடன் வாங்குபவர்களுக்கும், இது பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
ஆபரணங்களுக்கு எதிரான நகைக்கடன்
நகைக்கடன் என்பதும் தங்க ஆபரணங்களுக்கு எதிராக கொடுக்கப்படும் கடனாகும். இது ஒரு பாதுகாப்பான எளிதான கடனாகவும் கூறப்படுகிறது. அங்கு தங்க நகைக்கடன் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் பிணையமாக வைத்து வழங்கப்படுகிறது. மேலும் ஒரு தனி நபர் வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் இந்த நகைக்கடனை பெற்றுக் கொள்ள முடியும்.