இந்திய பொருளாதாரமும், வர்த்தகமும் வளர்ச்சி அடைய வங்கிகளின் வர்த்தகமும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும் இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை, ஆனால் இதேவேளையில் வாராக் கடன் என்ற மிகப்பெரிய பாதிப்பு ஒன்று உள்ளது.
இப்படி இந்தியாவில் பெரும்பாலான வங்கிகளில் வாராக் கடன் அளவு கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளது. இது வங்கிகளைத் தாண்டி நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பைத் தரும் என்பதால் ஆர்பிஐ கடுமையான கட்டுப்பாடுகள் உடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் வாராக் கடன் பற்றி முக்கியமான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மார்ச் 2023க்குள் வங்கிகளின் வாராக் கடன் கூடுதலாக 5.3 சதவீதம் வரையில் சரிய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மேக்ரோஎக்னாமிக் சூழ்நிலை
தற்போதைய அளவே கிட்டதட்ட 6 வருட குறைவான அளவு என்பதோடு, இந்த 5.3 சதவீத அளவீடு என்பது அதைக் காட்டிலும் குறைவான அளவு. ஆனால் மேக்ரோஎக்னாமிக் சூழ்நிலை மோசமாகும் பட்சத்தில் வாராக் கடன் அளவு அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
கிராஸ் என்பிஏ (GNPA)
இந்திய வங்கிகளின் கிராஸ் என்பிஏ (GNPA) அளவு மார்ச் 2022ல் 6 வருட சரிவான 5.9 சதவீதமாக இருந்தது, இந்த அளவு மார்ச் 2023ல் 5.3 சதவீதம் வரையில் சரியும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. மார்ச் 2021ல் இந்தக் கிராஸ் என்பிஏ அளவு 7.4 சதவீதமாக இருந்தது மறக்க முடியாத விஷயமாக இருந்தது.
இந்திய பொருளாதாரம்
கொரோனா தொற்றுக் காலத்தில் இந்திய பொருளாதாரம், வர்த்தகச் சந்தைகள் மோசமான நிலையில் இருந்து போது வாராக் கடன் கடுமையாக உயரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்த நடவடிக்கை காரணமாகப் பெரும் பாதிப்புத் தவிர்க்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
NARCL அமைப்பு
இந்நிலையில் ஜூலை மாதம் முதல் 6000 கோடி ரூபாய் முதலீட்டில் வாராக் கடனை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட NARCL அமைப்பு தனது பணிகளை விரைவாகவும், வேகமாகவும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி நிலைத்தன்மை அறிக்கை
ஆர்பிஐ வியாழக்கிழமை வெளியிட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையின் (எஃப்எஸ்ஆர்) 25வது அறிக்கையில், மேக்ரோ பொருளாதாரச் சூழல் நடுத்தர அல்லது கடுமையான அழுத்தம் மூலம் மோசமடைந்தால், கிராஸ் என்பிஏ விகிதம் 6.2 சதவீதம் மற்றும் 8.3 சதவீதமாக உயரக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.