இந்திய ரிசர்வ் வங்கி கொரோனா 2வது அலையில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளைச் சரி செய்யத் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று இந்திய வர்த்தகம், பொருளாதாரத்தைப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையிலும் மும்பை பங்குச்சந்தை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கி பங்குச்சந்தையில் உருவாகியுள்ள குமிழி எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என எச்சரித்துள்ளது
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குக் கடந்த சில மாதங்களாகச் சரியாகக் கவனித்து இருந்தால் கட்டாயம் தெரிந்திருக்கும், நாட்டின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, உற்பத்தி, நுகர்வு என அனைத்தும் கொரோனா தொற்றால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள வேளையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தியாவின் நிலை
உண்மையாக இந்தியாவின் நிலையைச் சற்றும் கவனிக்காமல், பங்குச்சந்தை இயங்கி வருகிறது என்றால் மிகையில்லை. தினமும் நாடு முழுவதும் பல நூறு பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
கொரோனா 2வது அலை
கொரோனா 2வது அலை துவங்கிய சில நாட்கள் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தாலும் அது வெறும் தடுமாற்றமாகவே இருந்தது. இதன் வாயிலாகக் கடந்த சில வாரங்களாக மும்பை பங்குச்சந்தையில் முதலீடு குவிந்து வரும் நிலையில் சென்செக்ஸ் 52,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. இதுபோலவே நிஃப்டியும் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சி - ஜிடிபி
மேலும் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு அதுவும் சுமார் 40 வருடச் சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ள இந்தச் சூழ்நிலையிலும் இன்று வெறும் 2.56 புள்ளிகள் மட்டுமே சென்செக்ஸ் சரிந்துள்ளது.
வருடத்தின் இறுதிக்குள் ஒரு சரிவு
இதன் மூலம் பங்குச்சந்தையும், இந்தியப் பொருளாதாரம் சற்றும் தொடர்பு இல்லாமல் இயங்கி வருவது தெளிவாக வெளிப்படுகிறது. இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த வருடத்தின் இறுதிக்குள் ஒரு சரிவு அதாவது Market Correction ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை
இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாப்பான துறையிலும், நிறுவனத்திலும் செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது மட்டும் அல்லாமல் வரவிருக்கும் பாதிப்பைச் சமாளிக்கக் கட்டாயம் தயாராக வேண்டும்.