டெல்லி: சமானிய மக்கள் பசியாலும், பட்டினியாலும் ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது. அதிலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் நடந்தே பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்ற பரிதாப நிலையையும் நாம் காண முடிந்தது.
இன்னும் சிலர் இவ்வாறு நடைபயணம் மேற்கொண்டவர்களில், தங்களது உயிரையும் கூட விட்டுள்ளனர்.
இப்படி அடுத்த வேலை சோற்று என்ன செய்வது என்று கஷ்டப்படும் மக்கள் ஒருபுறம். மறுபுறம் லாக்டவுனால் வேலைக்கு செல்ல முடியாமல் தங்களது வருமானத்தினை இழந்து வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்காக ஆர்பிஐ அறிவிப்பின் படி வங்கிகள் அனுமதி கொடுத்தாலும், 90 நாள் தடைக்கு பின்னர் வட்டியை கட்டித்தானே ஆக வேண்டும்.
மோசடியாளர்கள் பட்டியல்
வங்கிகள் அவகாசம் கொடுத்தாலும் லாக்டவுனுக்கு பிறகு வட்டியும் முதலும் எப்படி கட்டுவது என யோசித்து வருகின்றனர் மக்கள். இந்த நிலையில் நாட்டில் முதல் 50 வங்கிக் கடன் மோசடியாளர்களின் பெயரினை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இது குறித்து ரிசர்வ் வங்கி சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார்.
எவ்வளவு ரைட்ஸ் ஆஃப்?
இதன் படி கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதனை திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் அந்த அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி இதுவரை மொத்தம் 68,607 கோடி ரூபாய் கடன் ரைட்ஸ் ஆஃப் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
யாருக்கு எவ்வளவு தொகை ரைட்ஸ் ஆஃப்?
மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் 5,492 கோடி ரூபாயும், இதே * ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனத்திற்கு (REI Agro) 4,314 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யட்டுள்ளது, மேலும் வின்சம் டயமண்ட்ஸ் நிறுவனத்துக்கு 4,076 கோடி ரூபாயும், ரோட்டேமேக் குளோபல் நிறுவனத்திற்கு 2,850 கோடி ரூபாயும் ரைட்ஸ் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவுக்கு எவ்வளவு?
அது மட்டும் அல்லாது குடோஸ் கெமி 2,326 கோடி ரூபாயும், இதே பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா 2,212 கோடி ரூபாயும், இதே ஷூம் டெவலப்பர்ஸ் (Zoom Developers Pvt Ltd) நிறுவனத்திற்கு 2,012 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 1,943 கோடி ரூபாய் ரைட்ஸ் ஆஃப்செய்யப்பட்டுள்ளது.
மொகுல் சோக்சிக்கு எவ்வளவு ரைட்ஸ் ஆஃப்
இவர்களோடு பிரீசியஸ் ஜூவல்லரி அண்டு டயமண்ட்ஸ் நிறுவனத்திற்கு 1,962 கோடி ரூபாயாகவும், மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா நிறுவனங்கள் முறையே 1,447 கோடி ரூபாய் மற்றும் 1,109 கோடி ரூபாயும் ரைட்ஸ் ஆஃப்செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வெளி நாடுகாளுக்கு தப்பி ஓட்டம்
மிகப்பெரிய தொழில் அதிபர் ஆன விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதேபோல் வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
தொடர் விசாரணை
இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. எனினும் இதுவரை அதற்கு தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இன்று வரை இது குறித்தான விசாரணை நடந்து வருகிறது.
இதுவோ இவ்வளவுன்னா மொத்த ரைட்ஸ் ஆஃப்!
இப்படி கோடீஸ்வரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் பல ஆயிரம் கோடிகளை ரைட்ஸ் ஆஃப் செய்த வங்கிகள், சாமானிய மக்களிடம் வசூல் செய்ய கறாராக நிற்பது ஏனோ தெரியவில்லை. முதல் 50 பேருக்கே சுமார் 68,000 கோடி ரூபாய்க்கு மேல் எனில், மீதமிருக்கும் தொகை என்பது எவ்வளவோ? தெரியவில்லை.