ஜெர்மன் நாட்டின் கேஷ் அண்ட் கேரி ரீடைல் வர்த்தக நிறுவனமான மெட்ரோ AG இந்தியாவில் அதிகப்படியான தள்ளுபடி விலையில் ஹோல்சேல் வர்த்தகத்தைச் செய்து வருகிறது. குறிப்பாகப் பெரு நகரங்களில் இருக்கும் சிறு கடைகளுக்கு அதிகப்படியான தள்ளுபடி அளித்து முக்கிய வாடிக்கையாளராகக் கொண்டு உள்ளது.
இந்தியாவில் போட்டியை சமாளிக்க முடியாமல் இருக்கும் வேளையில் மெட்ரோ நிர்வாகம் தனது வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
இந்த நிறுவனத்தைக் கைப்பற்றக் கடுமையான போட்டி நிலவிய வேளையில் கடைசியாக 3 நிறுவனங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்திய ரீடைல் சந்தை
இந்திய ரீடைல் சந்தை எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மெட்ரோ போன்ற பிரபலமான பிராண்டுகள் தனது வர்த்தகம், கடைகள் என அனைத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ள வேளையில், கட்டாயம் குழாயடி சண்டை தான் நடக்கும்.
அம்பானி முதல் டாடா வரை
இந்த வேளையில் அம்பானி முதல் டாடா வரையில் மெட்ரோ வர்த்தகத்தைக் கைப்பற்ற போட்டிப்போட்ட நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தில் 3 பேர் உள்ளனர். மெட்ரோ வர்த்தகத்தைக் கைப்பற்றி ரீடைல் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் டிமார்ட் கூட ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ கேஷ் அண்ட் கேரி வர்த்தகம்
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி மெட்ரோ கேஷ் அண்ட் கேரி வர்த்தகத்தைக் கைப்பற்றும் இறுதிக்கட்ட போட்டியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தாய்லாந்து நாட்டின் CP குரூப், உதான் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவிலான பங்குகளை வைத்திருக்கும் லைட்ஸ்பீட் வென்டசர் பார்ட்னர்ஸ் ஆகியவை உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனி மெட்ரோ-வின் திட்டம்
இந்தப் போட்டியில் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி வர்த்தகத்தைக் கைப்பற்ற அதிகளவிலான வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஜெர்மனி நாட்டின் மெட்ரோ நிறுவனத்தின் நிர்வாகம் வேகமாக வெளியேறத் திட்டமிட்டு உள்ள வேளையில் உடனடியாகப் பணம், வர்த்தகப் பரிமாற்றம் பணிகளை மேற்கொள்வதில் CP குரூப், லைட்ஸ்பீடு நிறுவனங்களைக் காட்டிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிக வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது.
31 கடைகள்
இந்தியாவில் 2003ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் மெட்ரோ AG நிறுவனம் நாடு முழுவதிலும் சுமார் 31 கடைகளை வைத்துள்ளது. இந்திய ரீடைல் துறையில் தற்போது போட்டி அதிகரித்துள்ள காரணத்திற்காகவும், தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டைச் செய்ய முடியாத நிலையிலும் இந்த ஜெர்மன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.