இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் டெலிகாம் சேவை அளிக்கும் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று மாலை காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஜியோ இன்ஃபோகாம்
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மே 6 வெளியிட்ட மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் முடிவுகளில் நிகர லாப அளவீடுகள் 15.4 சதவீதம் அதிகரித்து 4,173 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் இக்காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் வருவாய் 8 சதவீதம் அதிகரித்து ரூ.20,901 கோடியாக உயர்ந்துள்ளது.
கட்டண உயர்வு
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் கடந்த ஆண்டு முதல் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வால் சந்தை கணிப்புகளைக் காட்டிலும் அதிகமான வருமானத்தையும், லாபத்தையும் மார்ச் காலாண்டில் பதிவு செய்துள்ளது.
ஏர்டெல், வோடபோன் ஐடியா
கட்டண உயர்வை ரிலையன்ஸ் ஜியோ மட்டும் அல்லாமல் இதர பிற தனியார் டெலிகாம் நிறுவனங்களும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மார்ச் காலாண்டு வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
செயல்பாட்டு லாபம்
செயல்பாட்டு அடிப்படையில், ரிலையன்ஸ் ஜியோவின் செயல்பாட்டு லாபம் அதாவது ஆப்ரேட்டிங் லாபம் முந்தைய காலாண்டில் ரூ.9,514 கோடியாக இருந்த நிலையில், மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.10,510 கோடியாக உயர்ந்துள்ளது. இதந் மூலம் செயல்பாட்டு வரம்பு 110 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 50.3 சதவீதமாக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகளவில் வெளியேறினாலும், புதிய வாடிக்கையாளர்களைக் கைப்பற்றுவதிலும் ஜியோ திறம் படச் செயல்படுகிறது. இதனாலேயே தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தை 2வது இடத்திலேயே இருக்க வைத்து ஜியோ தொடர்ந்து பல காலாண்டுகளாக முதல் இடத்தில் உள்ளது.