இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி கடந்த சில மாதமாக தனது கிளீன் எனர்ஜி வர்த்தகத்தில் மிகவும் பிசியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீடைல் வர்த்தகம் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய தேர்வு செய்த முக்கியமான பிரிவு டிஜிட்டல் வர்த்தகம். இப்பிரிவில் ஏற்கனவே மெட்பிளஸ், ஜஸ்ட்டயல், அர்பன் லேடர் என பல நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
தற்போது ஆன்லைன் டெலிவரி அதாவது ரீடைல் தளத்தில் இருக்கும் அனைத்து பொருட்களையும் டெலிவரி செய்யும் பொதுவான டெலிவரி சேவை நிறுவனமான டன்சோ நிறுவனத்தில் ரிலையன்ஸ் ரீடைல் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது.
டன்சோ - ரிலையன்ஸ் ரீடைல்
ஆன்லைன் டெலிவரி சேவை நிறுவனமான டன்சோ தனது வர்த்தகம் மற்றும் சேவையை விரிவாக்கம் செய்ய முதலீட்டை திரட்ட முடிவு செய்தது. கொரோனா தொற்றுக்கு பின்பு இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைய துவங்கிய நிலையில் வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்ய இத்துறை நிறுவனங்களுக்கு முதலீடு தேவைப்படுகிறது. இதேபோல் முதலீட்டு நிறுவனங்களும் இத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளது.
200 மில்லியன் டாலர் முதலீடு
இந்நிலையில் டன்சோ நிறுவனத்தின் 240 மில்லியன் டாலர் மெகா முதலீட்டு சுற்றில் ரிலையன்ஸ் ரீடைல் தனது டெலிவரி சேவை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் திட்டத்துடன் டன்சோ நிறுவனத்தில் சுமார் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 25.8 சதவீத பங்குகளை கைப்பற்றியது.
ரிலையன்ஸ் ரீடைல்
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டன்சோ நிறுவனத்தில் ரிலையன்ஸ் ரீடைல் மட்டும் அல்லாமல் பல லைட்பாக்ஸ், ஆல்டெர்யா கேபிடல் உட்பட பல முதலீட்டாளர்கள் முதலீடு செய்தது. சமீபத்தில் சோமேட்டோ நிறுவனம் க்ரோபர்ஸ் (தற்போது Blinkit) நிறுவனத்தில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
டன்சோ விரிவாக்கம்
டன்சோ நிறுவனம் இப்புதிய முதலீட்டை வைத்து டெலிவரியின் வேகம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் B2B பிரிவிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
25.8 சதவீத பங்குகள்
இந்திய குவிக் காமர்ஸ் வர்த்தகத்தில் சில நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் டன்சோ முன்னோடியாகவும், குறிப்பாக இதில் 25.8 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றியுள்ளது.
டன்சோ சிஇஓ
ரிலையன்ஸ் ரீடைல் உடனான கூட்டணியில் அடுத்த 3 வருடம் தங்களது வர்த்தக அளவு மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்யும் என டன்சோ நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் சிஇஓ கபீர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.