இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அழகு சாதன பொருட்கள் விற்பனை துறையில் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்ட நைகா மற்றும் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட்-ன் கிளை நிறுவனமான மின்திரா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இவ்விரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை உடைத்து இத்துறையில் உருவாகும் புதிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் கைப்பற்றும் நோக்குடன் ரிலையன்ஸ் ரீடைல் களத்தில் இறங்கியுள்ளது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் தனது வர்த்தகத்தை ஈஷா அம்பானி தலைமையில் வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் கூட FMCG பிரிவில் 12க்கும் அதிகமான சிறு பிராண்டுகளை 6.5 பில்லியன் டாலர் முதலீட்டில் கைப்பற்ற திட்டம் தீட்டியது.
பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ்
இந்நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களை விற்பனை செய்வதற்காக மட்டுமே தனிப்பட்ட கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அடுத்தச் சில வருடத்தில் இந்தியா முழுவதும் சுமார் 400 கடைகளைப் பிரிவில் மட்டும் திறக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2 பிரிவு கடைகள்
பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பிரிவில் இரு மாதிரி வடிவத்தில் கடைகளைத் திறக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. முதலாவதாக லூயி உட்டான் நிறுவனத்தின் Sephora கடைகள் போல் விலை உயர்ந்த பொருட்களுக்குத் தனி மல்டி பிராண்ட் கடைகளையும், மற்றொருன்று அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் அனைத்து விலைகளைக் கொண்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் உருவாக்க முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.
Tiara பிராண்ட்
இப்பிரிவு விற்பனைக்கு ஏற்கனவே Tiara எனப் பிராண்ட் பெயரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்தப் பிராண்ட் கடைகள் அனைத்தும் ஆடம்பர அழகு சாதன பொருட்களின் வர்த்தகத்திற்கானது.
சிறு கடைகள்
ஆனால் ரிலையன்ஸ் ரீடைல் 1000-2000 சதுரடி கொண்ட கடைகளை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்வதில் தான் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. Tiara பிராண்ட் கடைகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஆடம்பர சந்தை வர்த்தகத்தின் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.