நாட்டில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலானது சற்றே குறைந்து வரத் தொடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் தனது சில்லறை வர்த்தகத்தினை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக ஜியோமார்டில் உள்ள முக்கிய துறைகளை விரிவுபடுத்துவதன் மூலம், அதன் டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் புதியதாக தொடங்கப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனமான ஜியோமார்ட், ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் மட்டும் சேவையை செய்து வருகின்றது.
விரிவாக்கம் செய்ய முயற்சி
எனினும் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு தொடர்ந்து, அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அதோடு ஜியோமார்ட் விரிவாக்கத்திற்காக பல ஆயிரம் கூட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றது. மேலும் அதன் சொந்த பிராண்டையும் விரிவாக்கம் செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
எந்தெந்த துறைகள்
தற்போது பேஷன், லைஃப் ஸ்டைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குரோசரி செக்மண்டிலும் விரிவாக்கம் செய்யவுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஜியோமார்ட்டினை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அண்மையில் இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அர்பன் லேடார், ஷிவாமி போன்ற நிறுவனங்களையும் ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.
ஜியோமார்டுடன் இணைப்பு
இந்தியாவில் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல், நாடு முழுவதும் 12,711 சில்லறை கடைகளை கொண்டுள்ளது. இது ஏற்கனவே குரோசரி மற்றும் ட்ரெண்டிஸ் உள்ளிட்ட நெட்வொர்குகளை, ஜியோமார்டுடன் இணைந்துள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் 400க்கும் மேற்பட்ட டிரெண்ட்ஸ் கடைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கம்
அதே நேரம் 800க்கும் மேற்பட்ட மளிகை கடைகளின் நெட்வொர்க்குகள் கடந்த ஆண்டில் இணைக்கப்பட்டுள்ளது. ஜியோமார்ட் சமீபத்தில் நவி மும்பையில் எல்க்ட்ரானிக்ஸ் வகை ஆடியோ பாகங்கள் மற்றும் சிறிய உபகரணங்களையும் தனது நெட்வொர்க்கில் சேர்த்துள்ளது. ஜியோமார்ட் தொடங்கியபோது இருந்த சேவைகளை விட, தற்போது மூன்று மடங்கு அதிகமான சேவைகளை செய்து வருவதாகவும், அந்த நிறுவனத்தின் சிஎஃப்ஓ தினேஷ் தாப்பர் ஒரு ஆய்வில் கூறியுள்ளார்.
திரும்ப ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள்
மேலும் தற்போது ஜியோமார்ட் 80% மீண்டும் மீண்டும் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு கிரானக்களுடனும் ஜியோமார்ட் விரிவுபடுத்தியுள்ளது. இது தவிர சமீபத்தில் ஆன்லைன் மருந்தகமான நெட்மெட்ஸ் மூலம் டிஜிட்டல் வர்த்தத்தினை இன்னும் மேம்படுத்தவும், இது போன்று பல்வேறு வகைகளிலும் முயன்று வருகின்றது.
114 மெடிக்கல் தொடக்கம்
இது தவிர ரிலையன்ஸ் ரீடெயில் ஸ்டோர்களில் 114 மெடிக்கல்களையும் தொடங்கியுள்ளது. மொத்தத்தில் ஜியோமார்ட் தனது வணிகத்தினை மேம்படுத்த தொடர்ச்சியாக முயற்சிகளை மேம்படுத்தி வருகின்றது. இதற்காக பல நிறுவனங்களையும் கையகப்படுத்தி வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு பால் வணிகத்திலும் இறங்கபோவதாகவும், இதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
போட்டி நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்
இப்படி ஒவ்வொரு துறையிலும் பார்த்து பார்த்து விரிவாக்கம் செய்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம், வரும் காலத்தில் போட்டி நிறுவனங்களாக அமேசான் பிளிப்கார்டுக்கு சவால் விடுக்கும் வகையில் மாறலாம் என்றும் எதிர்பார்பக்கப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தான் எந்த வணிகமா னாலும், அதில் போட்டி நிறுவனங்களை வீழ்த்தி அதிலும் தனி இடம் வகிப்பதை ஜியோவின் மூலமே அறிந்திருப்போம். அப்படியிருக்கையில், இந்த நிறுவனம் இனி அடுத்தடுத்து எந்த மாதிரியான விரிவாக்கங்களை செய்யப்போகிறதோ? சற்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே.