முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 44வது வருடாந்திர கூட்டம் ஜூன் 24ஆம் தேதி முடிந்த நிலையில் ஜூன் 25ஆம் தேதி இந்நிறுவனப் பங்குகள் சிறப்பான வர்த்தக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் இரு முக்கியக் காரணங்களை வைத்துக் கூறுகின்றனர்.
ஒன்று புதிய கீரின் எனர்ஜி வர்த்தகம் மற்றொன்று சவுதி ஆராம்கோ தலைவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகக் குழுவில் இணைந்தது.
கிரீன் எனர்ஜி வர்த்தகம்
இந்தியாவில் கிரீன் எனர்ஜி வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் இத்துறைக்கான ஒட்டுமொத்த எக்கோ சிஸ்டம்-ஐ உருவாக்க சுமார் 75,000 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் வருவாய் மற்றும் வர்த்தகம் நீண்ட கால முறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது.
75,000 கோடி ரூபாய் முதலீடு
இதற்காகத் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். சுமார் 4 தொழிற்சாலைகள் கொண்ட இத்திட்டத்திற்கு 75,000 கோடி ரூபாய் முதலீட்டில் இப்புதிய எனர்ஜி வர்த்தகத்தைத் துவங்க உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
சவுதி அராம்கோவின் யாசி அல் ருமேயான்
ரிலையன்ஸ் குழுமத்தின் மிகப்பெரிய தூணாக இருந்து வரும் ஓய்.பி திரிவேதி, ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தினைத் தெரிவித்துள்ளதாகவும், இந்த இடத்தில் ரிலையன்ஸ் குழுமத்தில், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் தலைவர் யாசி அல் ருமேயான் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு
இந்த இரு பெரும் ஜாம்பவான்களின் கூட்டணியானது, இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் வர்த்தகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்துப் பேசிய முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுவில் சவுதி அராம்கோ தலைவர் இருப்பது சர்வதேசமயமாக்கலின் ஒரு தொடக்கம் என்றும் கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் - சவுதி அராம்கோ
இக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் - சவுதி அராம்கோ நிறுவனங்களுக்கு இடையேயான 15 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம், இந்த ஆண்டில் இறுதிக்குள் முடிவடையும் எனத் தெரிவித்துள்ளார்.
1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
இந்த ஒப்பந்தம் படி ரிலையன்ஸ் தனது எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து சுமார் 15 முதல் 25 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் குழுமத்திற்குப் புதிதாக 1.25 லட்சம் கோடி ரூபாய் முதல் 1.50 லட்சம் கோடி ரூபாய் வரையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடன் இல்லா நிறுவனம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே கடன் இல்லா நிறுவனமாக இருக்கும் நிலையில் இப்புதிய முதலீடு உபரி பணமாக மட்டுமே இருக்கும். அதேபோல் ரிலையன்ஸ் - சவுதி அராம்கோ நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டணி அதிகளவிலான வர்த்தக லாபத்தைப் பெற முடியும்.
3000 ரூபாய் அளவீடு
இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் அடுத்த 6 முதல் 9 மாதத்தில் ஒரு பங்கு விலை 3000 ரூபாய் அளவீட்டைத் தாண்டும் எனப் பங்குச்சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 2.28 சதவீதம் சரிந்து 2,104.30 ரூபாயாகச் சரிந்துள்ளது.