சமீபத்திய நாட்களில் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி அப்பாவி மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். அப்படித்தான் லக்னோவைச் சேர்ந்த ஒருவர் மோசடிக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு ரூ. 85 லட்சத்தை இழந்துள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. இவர் எப்படி சிக்கினார்? எதனால் இவ்வளவு பணம் கைமாற்றப்பட்டது? என்ற விவரங்களைப் பார்ப்போம்.
லக்னோவைச் சேர்ந்தவர் பத்ரி நாராயண். இவர் கார்காபூர் பகுதியில் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரான இவருக்கு 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி அன்று வாட்ஸ்அப் மூலம் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஒரு பெண் பேசியுள்ளார். அந்தப் பெண் தன்னை திவ்யா ஷர்மா என்று அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி திவ்யா ஷர்மா தான் ஒரு பெரிய தொழிலதிபர் என்று காட்டிக் கொண்டு, தனக்கு சொந்தமாக "அர்வான் லெதர் லேப்" என்ற நிறுவனம் குருகிராமில் உள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படியே நாட்கள் செல்ல செல்ல பத்ரிக்கும், திவ்யா ஷர்மாவிற்கும் நட்பு வளரத் தொடங்கியுள்ளது.
அடுத்ததாக திவ்யா பேசியது தான் ஹைலைட். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை! நீங்கள் விருப்பப்பட்டால் நான் உங்கள் மகனையே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளார். வீட்டில் இருக்கும் ஒருவரை போலவே பேசத் தொடங்கியதால், பத்ரிக்கு திவ்யா மீது அபார நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இப்படியே பேசி பேசி நம்பிக்கையை அதிகரித்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியுள்ளார் திவ்யா. ஆன்லைன் டிரேடிங் மூலம் லட்சகணக்கில் லாபம் பார்க்கலாம் என்று கூறி பத்ரியின் ஆசையைத் தூண்டியதால், அவரும் கண்மூடித்தனமாக திவ்யா சொன்ன வங்கி கணக்குக்கு 85,45,614 ரூபாயை அனுப்பியுள்ளார்.
இன்றைய சூழலில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்தி என்ன தெரியுமா? தங்களுக்ன ஒரு தளத்தை முதலில் உருவாக்கிக் கொள்கின்றனர். அப்பாவி மக்களிடம் பணம் பறித்த பிறகு அவர்களிடமே அதிக லாபம் கிடைத்தது போல டிஸ்ப்ளேவில் காண்பிக்கின்றனர்.
இதனால் ஈர்க்கப்பட்டு, ஏமாறும் மக்கள் மேலும் மேலும் பணத்தை மோசடிக்காரர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடுகின்றனர். பணம் கைமாறிய பிறகு தான் மக்களுக்கு விழிப்பே வருகிறது. அப்படித்தான் இந்த சம்பவத்திலும் நடந்துள்ளது. பணத்தை மொத்தமாக பத்ரி அனுப்பிய பிறகு, திவ்யாவின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாட்சப் மெசேஜ்க்கு பதிலும் வரவில்லை.
அதன் பிறகு பத்ரி, ஆன்லைன் "திவ்யா" தனக்கு விபூதி தான் அடித்திருக்கிறார் என்பதை உணர்ந்தார். உடனே அருகில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த வழக்கிற்கு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என்றும் காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது போன்ற பதிவுகளில் இருந்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். முன்பின் தெரியாத நபர்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிக லாபம் கிடைக்கும் என்று யாரோ ஒருவர் சொல்கிறார் என்பதற்காக உங்களுடைய வாழ்நாள் சேமிப்பை அனுப்புவது, இதே போன்ற சம்பவத்திற்கு வழிவகுக்கலாம்.
ஆசை யாரை விட்டது? என்று சொல்வார்கள். ஆனால் அந்த ஆசையே அளவுக்கு மீறி போனால் நம்மை அதீத சிக்கலுக்கு ஆளாக்கிவிடும் என்பதும் உண்மை. எனவே முன்பின் தெரியாதவர்களிடம் முதலீடு செய்வதற்கு முன்பு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு அரசாங்க திட்டங்களைப் பயன்படுத்தலாம். பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் சிறப்பான திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அதில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். ஒரே மாதத்தில் இரட்டிப்பு வருமானம், ஒரே மாதத்தில் மூன்று மடங்கு வருமானம் எனக் கூறும் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இது போன்ற சம்பவத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், ஏமாறும் மக்களின் எண்ணிக்கை இன்னும் குறையவே இல்லை. அதற்கு தற்போது ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியும் ஆளாகியுள்ளது தான் இன்னும் வேதனையை ஏற்படுத்துகிறது. இது போன்ற பதிவுகளை படிக்கும்போதோ அல்லது பார்க்கும்போதோ உங்கள் குடும்பத்தினரிடமும் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!


Click it and Unblock the Notifications