பொதுவாக வருமான வரி செலுத்துவோர் சரியான காலக்கெடுவுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனில், அவர்களுக்கு வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வரும்.
வருமான வரி தாக்கலில் ஏதேனும் விவரங்கள் பொருந்தவில்லை எனில், உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம்.
ஆனால் உத்திரபிரதேசத்தில் உள்ள ரிக்ஷா ஒட்டுனர் ஓருவருக்கு 3 கோடி ரூபாய்க்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அப்பகுதியில் சற்றே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.3 கோடி நோட்டீஸ்
உத்திரபிரதேச மாநிலத்தினை சேர்ந்த பகல்பூர், அமர் காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் சிங். இவர் ஒரு ரிக்ஷா ஒட்டுனர். இவருக்கு தான் வருமான வரித்துறையினர் 3 கோடி ரூபாய்க்கு வருமான வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வருமான வரி நோட்டீஸை கண்டு அதிர்ச்சியடைந்த பிரதாப் சிங், அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
மோசடி செயல்
இந்த புகாரினையடுத்து, பிரதாப்பின் ஆதார் கார்டினை பயன்படுத்தி வேறு ஒருவர், மோசடி செய்து தொழில் செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பிரதாப் சிங் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பான் கார்டு அப்ளை
பான் கார்டினை சமர்பிக்குமாறு அவரது வங்கியில் இருந்து அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதில் மார்ச் 15ம் தேதியன்று தேஜ் பிரகாஷ் உபாத்யாய்க்கு சொந்தமான பகல்பூரில் உள்ள ஜன் சுவிதா கேந்திராவில் பான் கார்டுக்கு விண்ணப்பித்தாக கூறியுள்ளார்.
எது ஒரிஜினல் பான் கார்டு
பான் கார்டுக்கு விண்ணப்பித்த பிரதாப், பகல்பூரை சேர்ந்த சஞ்சய் சிங்கிடம், பான் கார்டின் நகலை (கலர்) பெற்றுள்ளார். பிரதாப்புக்கு போதிய படிப்பறிவு இல்லாததால் அவரால், ஓரிஜினல் எது, போலி பான் எது என வேறுபடுத்த முடியவில்லை எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ்
இதற்கிடையில் சுமார் மூன்று மாதங்கள் தனது ஒரிஜினல் பான் கார்டை பெற காத்திருந்ததாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில் தான் அக்டோபர் 19ம் தேதியன்று வருமான வரித்துறையிடம் இருந்து தனக்கு நோட்டீஸ் வந்ததாகவும், அதில் 3,47,54,896 ரூபாய் வருமான வரி செலுத்துமாறும் கூறியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆள்மாறாட்டம் செய்து மோசடி
இதன் பின்னர் யாரோ ஒருவர் தனது பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, தனது பெயரில் ஜிஎஸ்டி பதிவு செய்து, வியாபாரம் செய்துள்ளதாகவும், அதிகாரிகள் தரப்பில் பிரதாப்பிடம் கூறப்பட்டுள்ளது. அந்த வர்த்தகரின் வருவாய் ஆனது 2018 - 19ம் ஆண்டில் 43,44,36,201 ரூபாய் என்றும் அதிகாரிகள் கூறியதாக பிரதாப் கூறியுள்ளார்.
எஃப்.ஐ.ஆர் பதிவு
இதற்கிடையில் தான் தொழில்நுட்ப அதிகாரிகள் தன்னை போலியாக ஆள்மாறாட்டம் செய்து, மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் செய்ய கூறியதாகவும் கூறியுள்ளார். பிரதாப் காவல் நிலையத்தில் தனது பிரச்சனையை கூறியுள்ள நிலையில், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகின்றது.