டெல்லி: ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கின் கீழ் அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில் இந்த பிரச்சனை இன்னும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
ஏனெனில் இந்த மோசடியில் ராணா கபூரின் மனைவி மற்றும் மகள்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனை நிரூபிக்கும் விதமாக ராணா கபூரின் மகள் ரோஷினி வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மாலை சென்ற போது, அங்கிருந்த அதிகாரிகள் லுக் அவுட் பட்டியலில் உங்கள் குடும்பத்தினர் பெயர் இடம் பெற்றுள்ளதால் வெளிநாடு செல்வதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என கூறி அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.
யெஸ் பேங்க் சிக்கல்
அதிகளவு வாராக்கடன் நிர்வாக பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் தனியார் வங்கியான யெஸ் பேங்க் சிக்கியுள்ளது. இதனால் அந்த வங்கி தற்போது ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
மேலும் யெஸ் பேங்கின் நிறுவனர் ராணா கபூர் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த அமலாக்க துறை அதிகாரிகள், மும்பையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். அந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனையில் நடந்த முறைகேடு குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து விசாரணை
இதையடுத்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராணா கபூரை மார்ச் 11 வரை அமலாக்க துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ராணா கபூரிடம் அதிகாரிகள் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாராக்கடன்
இந்த நிறுவனங்கள் மூலமாக 2000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 44 விலையுயர்ந்த ஓவியங்களையும், 12க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களையும் கண்டுபிடித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் விளம்பரதாரர் கபில் வாதவனுக்கும், ரானா கபூருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் டிஹெச்எஃப்எல்லுக்கு வழங்கிய கடனை யெஸ் பேங்க் வாராக்கடனாக அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக இவர் யெஸ் மோசடியில் ஏதேனும் வகையில் பங்கு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது..
உண்மை என்னவென்று விசாரணைக்கு பின்பு தானே தெரியவரும்.