இந்திய பங்கு சந்தையானது இன்று மதிய அமர்வுக்கு பிறகு, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சரிவினைக் கண்டுள்ளது.
குறிப்பாக சென்செக்ஸ் 567.98 புள்ளிகள் குறைந்து, 55,107.34 புள்ளிகளாகவும், நிஃப்டி 153.2 புள்ளிகள் குறைந்து, 16,416.35 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதே 2022ல் சென்செக்ஸ் 5.54% அல்லது 3225 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி 968 புள்ளிகள் அல்லது 5.58% சரிவினைக் கண்டுள்ளது.
சந்தை மூலதனம்
இதே ஒரு வருடத்தில் சென்செக்ஸ் 5.13% அல்லது 2686 புள்ளிகள் சரிந்தும், இதே நிஃப்டி 4.05% அல்லது 638 புள்ளிகளாகவும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம், இன்று 256.41 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 253.87 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு 2.54 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
சர்வதேச காரணிகள்
சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றது. சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படும் நிலையில், ஆசிய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றது. சீனாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில் தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு வணிக வளர்ச்சியானது மேம்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 120 டாலர்களுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதே டபள்யூ டி ஐ கச்சா எண்ணெய் விலையானது 119 டாலர்களுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இது சவுதி அரேபியா அதன் அதிகாரப்பூர்வ விற்பனை விலையை உயர்த்துவதாக அறிவித்த நிலையில் வந்துள்ளது. இது பணவீக்கத்தினை தூண்டலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வருகின்றன.
ஆர்பிஐ கூட்டம்
இதற்கிடையில் வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தின் பக்கம் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வங்கி மட்டும் அல்ல, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.