மும்பை: இந்தியாவுக்கு நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றன.
கடந்த வாரத்தில் தான் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வந்தது.
அரசும் பொருளாதாரத்தினை மேம்படுத்த என்ன தான் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மறுபுறம் அதனை சீர்குலைக்கும் விதமாக பிரச்சனைகள் புதிது புதிதாக வந்து கொண்டே தான் இருகின்றன.
ரூபாய் வீழ்ச்சி
இந்த செவ்வாய்கிழமையான இன்று ரூபாயின் மதிப்பு 15 மாதங்களில் இல்லாத அளவு 73 ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் என்று கூறப்படுகிறது. கொரோனா வெடிப்பின் காரணமாக முதலீட்டாளர்கள் இடையே அதிகரித்து வரும் கவலையினால், அமெரிக்கா டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் படு வீழ்ச்சி கண்டுள்ளது.
ரூபாய் மதிப்பு 2% சரிவு
ரூபாயின் மதிப்பு இன்று காலை 72.22 ரூபாய் தொடங்கிய நிலையில், மதியம் 1.42 மணியளவில் 73.03 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடைசியாக நவம்பர் 12, 2018 அன்று இந்த விகிதத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த திங்களன்று ரூபாயின் மதிப்பு 72.76 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இது மூன்றாவது தொடர்ச்சியான வீழ்ச்சியாகும். இந்த காலத்தில் மட்டும் 2% அதிகமாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.
வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்
ஏழு தலைவர்களின் குழு மாநாட்டிற்கு முன்னதாக உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்களிடமிருந்து நிவாரண நடவடிக்கை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரூபாய் உயர்ந்தது. ஆனால் இந்தியாவில் மீண்டும் கொரோனா வெடிப்புக்கு பின்னர், முதலீட்டாளர்களின் உணர்வை ஆதரிக்க மத்திய வங்கிகளின் உத்தரவாதங்கள் போதுமானதா என முதலீட்டாளர்கள் எடைபோட்டதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மீண்டும் கண்டுள்ளது.
மற்ற நாணயங்களும் வீழ்ச்சி
இதே ஆசிய நாணயங்களில் தாய்லாந்தின் தாய் பாத் 0.4%, சீனாவின் யுவான் 0.3%, சிங்கப்பூர் டாலர் 0.3% தென் கொரியாவின் நாணய மதிப்பு 0.1% வீழ்ச்சி கண்டுள்ளன. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் புதிதாக கொரோனாவால் சிலர் தாக்கம் அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களிடையே இதும் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
இந்திய வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்
கொரோனா வைரஸினால் உலகளாவிய வளர்ச்சியில் ஏற்பட்ட தாக்கம், அதனை மீட்கும் வேகம் முதலீட்டாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பலவீனமான சீனா, உலகளாவிய வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று நங்கள் நம்புகிறோம். கொரோனாவினால் உலகளாவிய விநியோக சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள், இந்தியாவின் வளர்ச்சியில் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.