ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவி வரும் உச்சகட்ட பதற்றமான நிலைக்கு மத்தியில், சர்வதேச அளவிலான பங்கு சந்தைகள் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றன.
குறிப்பாக இந்திய சந்தையானது இன்று காலை தொடக்கத்திலேயே 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவில் தொடங்கியது. தற்போது அந்த சரிவானது இன்னும் அதிகரித்து 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவினைக் கண்டுள்ளது.
ஒரு புறம் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் சந்தைக்கு மத்தியில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளனர். இந்திய முதலீட்டாளர்களும் பெரும் இழப்பினை கண்டுள்ளனர்.
10ல் 9 பங்குகள் சரிவு
மறுபுறம் இந்திய சந்தையினை பொறுத்தவரையில் இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால், அதுவும் சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சந்தையானது இன்னும் சரிவினைக் காண இது காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் இந்திய சந்தையில் 10ல் 9 பங்குகள் சரிவினைக் கண்டுள்ளன.
ரூ.10 லட்சம் கோடி அவுட்
இதற்கிடையில் முதலீட்டாளர்கள் இதுவரையில் சந்தையில் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளனர். 3057 பங்குகளில் 2758 பங்குகள் சரிவில் காணப்படுகின்றன. இதற்கிடையில் 95 பங்குகள் மாற்றமில்லாமலும், 224 பங்குகள் ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
சென்செக்ஸ் & நிஃப்டி நிலவரம்
சென்செக்ஸ் 3.54% அல்லது 2032.32 புள்ளிகள் குறைந்து, 55,207.7 புள்ளிகளாகவும், நிஃப்டி 573 புள்ளிகள் குறைந்து, 16,490.45 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இதற்கிடையில் இந்திய சந்தையில் உள்ள அனைத்து குறியீடுகளும் பெரும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ 5% மேலாகவும், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 3% மேலாக சரிவிலும் காணப்படுகின்றன.
பெரும் சரிவில் பங்குகள்
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், யுபிஎல், இந்தஸ் இந்த் வங்கி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாக உள்ளன. இதுவே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ் இந்த் வங்கி, எம்& எம், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல் டெக், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் பலத்த சரிவினையும் கண்டுள்ளன.