கொரோனா வைரஸால் பில் கேட்ஸ், முகேஷ் அம்பானி போன்ற உலக பணக்காரர்கள் தொடங்கி, குமார மங்கலம் பிர்லா, பலோன்ஜி மிஸ்த்ரி, கோத்ரேஜ் குடும்பம், ஹிந்துஜா குடும்பம் போன்ற இந்தியப் பணக்காரர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை.
சாதாரண ஏழை எளிய மக்கள் வரை, எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால் அடித்தட்டு மக்கள், அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பவர்கள், கூலித் தொழிலாளிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் தான் இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.
அப்படி, கொரோனா வைரஸ் லாக் டவுனால் வேலை இழந்த பல தொழிலாளர்களுக்கு ஒரு மும்பை மசூதி உணவு வழங்கி வருகிறதாம்.
உணவு
மும்பையின் புற நகர் பகுதிகளில் ஒன்று தான் சகினகா (Sakinaka). இந்த பகுதியில் இருக்கும் மசூதியில் தான் சுமார் 800 பேருக்கு உணவு கொடுக்கிறார்களாம். இந்த 800 பேரும், கொரோனா வைரஸ் லாக் டவுனால் தங்கள் வேலையை இழந்தவர்கள். அவர்களின் பசியை போக்கத் தான் சகனிகா பகுதி மசூதி களத்தில் இறங்கி உணவுகளை வழங்கிக் கொண்டு இருக்கிறது.
ரேஷன் பொருட்கள்
அது போக மும்பை சகினகா மசூதிக்கு அருகில் வாழும் மக்களுக்குத் தேவையான அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களையும், மசூதி கொடுப்பதாகச் சொல்கிறார் மெளலானா அதிஃப் சனபலி (Maulana Atif Sanabali). மேலும் பசியைப் பற்றி நறுக்கென ஒரு வார்த்தை சொல்லி இருக்கிறார்.
பசி பயங்கரம்
"தற்போது பரவிக் கொண்டு இருக்கும் கொரோன வைரஸைப் போல பசியும் ஒரு கொடூரமான விஷயம் தான். பசி மதத்தைப் பார்ப்பதில்லை, அது எல்லோரையும் பாதிக்கும். எங்கள் குறிக் கோள் ஒன்று தான் பசியோடு யாரும் தூங்கக் கூடாது" எனச் சொல்லி இருக்கிறார் சனபலி.
சுத்த பத்தம்
கொரோனா வைரஸை எதிர் கொள்ள அரசு வலியுறுத்தும் சமூக விலகளை கடை பிடித்து தான் உணவுகளை பரிமாறுகிறார்களாம். அதோடு உணவை சுத்தமான முறையில் தயாரிப்பதாகவும் சொல்லி இருக்கிறார் மெளலானா அதிஃப் சனபலி (Maulana Atif Sanabali). மனிதம் மலரட்டும், அன்பு பெருகட்டும்.