ரியாத்: எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சவுதி அராம்கோ நிறுவனம், ஏற்கனவே அறிவித்தது போல் ஏப்ரலில் இருந்து ஒரு நாளைக்கு 12.3 மில்லியன் பேரல் எண்ணெய் சப்ளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனை இந்த நிறுவனம் சவுதி பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ சுமார் 9.8 மில்லியன் பேரல்களை தற்போது ஏற்றுமதி செய்து வருகிறது.
கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டம்
இந்த நிலையில் இது ஏப்ரல் மாதத்தில் இருந்து குறைந்தபட்சம் 2.5 மில்லியன் பேரல்களை கூடுதலாக ஏற்றுமதி செய்யவும் சவுதி அராம்கோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக ஏப்ரல் 1, 2020 முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக இது நீண்டகால நிதி விளைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் இந்த நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எண்ணெய் சேமிப்பு
சவுதி அரேபியா ஒரு நாளைக்கு 12 மில்லியன் பேரல்களை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருக்கும். எவ்வளவு நாட்களுக்கு இப்படி தக்க வைத்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. ஆனால் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ள டஜன் கணக்கான எண்ணெய்களை சேமித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனை செய்ய தவறி விட்டன
ஆக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தையில் ஒபெக் நாடுகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் குறிப்பாக ரஷ்யா அனைத்து எண்ணெய் விலையினை குறைத்துள்ளன. எனினும் கடந்த வெள்ளிக்கிழமையன்று கூடுதல் உற்பத்தி குறித்தாக ஒப்பந்ததத்தை பெற தவறி விட்டன. ரஷ்யாவின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
ரஷ்யா தான் காரணமா?
மார்ச் மாதம் வரையில் 2.2 மில்லியன் பேரல் உற்பத்தியை குறைத்த நிலையில், மேலும் தற்போது ஒபெக் நாடுகள் கூடுதலாக 1.5 மில்லியன் பேரல்களை குறைக்க திட்டமிட்டிருந்த நிலையில், ரஷ்யா அதற்கு முடியாது என திட்டவட்டமாக மறுத்தது. ரஷ்யாவின் இந்த எதிர்ப்பால் கொதித்தெழுந்த சவுதி அரேபியா, ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அந்த அறிவிப்பினை கொடுத்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
எண்ணெய் விலையில் போர்
இது கச்சா எண்ணெய் விலையில் பெரிய விலை யுத்தத்தினையே உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பலமான சலுகையுடன் ஒரே இடத்தில் எண்ணெய் கிடைக்கிறது என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்ல மாட்டர்கள். ஆக இந்த அறிவிப்பு வெளியான அன்றே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 30% வீழ்ச்சி கண்டுள்ளது. இது 1991ல் அமெரிக்கா ஈராக் போருக்கு பின்னர் எண்ணெய் சந்தைகள் படு வேகமாக அன்று தான் அவ்வாறு வீழ்ச்சி கண்டதாகவும் கூறப்பட்டது. ஆக இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் இடையே கூட ஒரு பெரிய விலைபோருக்கு தூண்டும் என்றும் கூறப்படுகிறது.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு எச்சரிக்கை
ஏற்கனவே உலக அளவில் நிலவி வரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், சவுதி அராம்கோவின் இந்த அறிவிப்புக்கு பின்னர் மீண்டும் விலை எப்படி இருக்குமோ தெரியவில்லை. இது ஒரு வகையில் இந்தியாவுக்கு நல்ல விஷயம் தான் என்றாலும், சில தினங்களுக்கும் ஆங்கில செய்தி ஒன்று வளர்ந்து வரும் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது நல்லதல்ல என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிச்சயம் மாற்றம் வரும்
எப்படி எனினும் சவுதி அராம்கோ இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரும்,போது, நிச்சயம் எண்ணெய் சந்தையில் இது புரட்சியை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும் சில மணி நேரங்களுக்கு முன்பு தான் ரஷ்யாவும் (https://tamil.goodreturns.in/news/russia-said-could-lift-output-and-that-it-could-cope-with-low-oil-prices-018079.html) எங்களுக்கும் உற்பத்தியை அதிகரிக்க முடியும். விலையை சமாளிக்க முடியும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் எண்ணெய் விலையில் விரைவில் அதிரடியான மாற்றம் வரப்போவது உறுதி..