பலமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் யெஸ் வங்கிகளின் பங்குகளை வாங்குவதற்கு எஸ்பிஐ தலைமையிலான கூட்டமைப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
எஸ்பிஐ மற்றும் எல்ஐசி இணைந்து யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் 1 பங்கின் விலை 2 ரூபாய் என்ற வீதத்தில் 490 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகள் வாங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிதி திரட்ட முடியவில்லை
ஆனால் தற்போது யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலியயில், அதன் நிதி மூலதனத்தை ஆர்பிஐ நிர்ணயித்த வரம்புக்குள் கொண்டு வர கடும் முயற்சி செய்து வந்தது. இந்த நிலையில் மூலதனத்தை உயர்த்த 14,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் அவ்வங்கி எதிர்பார்த்த அளவில் முதலீடு வராத நிலையில் அந்த இலக்கை 10,000 கோடி ரூபாயாக குறைத்தது.
இவர்களுக்கு எல்லாம் கடன்
ஐஎல்&எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் எஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி 10,200 கோடி ரூபாய்க்கு மேல் கடன் அளித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மேற்கூறிய நிறுவனங்களில் சில திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் மிக அதிகளவில் உயர்ந்துள்ளது.
எஸ்பிஐ பங்கினை வாங்கலாம்
இந்த நிலையில் தற்போது எஸ்பிஐ மற்றும் எல்ஐசி கூட்டமைப்பு யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க முன் வந்துள்ளது. தற்போது யெஸ் வங்கியின் கடன் சுமை 14,700 கோடி ரூபாயாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் சுமார் 54.5% ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன் எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், யெஸ் பேங்கினை நொடிந்து போக விடமாட்டோம் என்று கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது யெஸ் வங்கியின் பங்குகளை எஸ்பிஐ வாங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
உண்மை நிலவரம் தான் என்ன?
இந்த அறிவிப்பானது ஆர்பிஐ எப்போது யெஸ் வங்கியினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதோ அப்போது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. யெஸ் பேங்க் பங்குகளுக்கு எதிராக கடன் வழங்கியதும், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் அவர்களின் நிறுவனப் பங்குகளுக்கு எதிராகக் கடன் வாங்கியதும், அதை திரும்ப செலுத்ததாதும் தான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அறிக்கைகள் வெளியானது போல் எஸ்பிஐ, எல்ஐசி, யெஸ் பேங்கின் பங்குகளை வாங்கினால் தான் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவரும்.


Click it and Unblock the Notifications