சிட்டிகுரூப் இந்தியா ரீடைல் வங்கி சேவையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ள நிலையில் இவ்வங்கியின் இந்திய வர்த்தகத்தைச் சக போட்டி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சிட்டிகுரூப்-ன் கிரெடிட் கார்டு வர்த்தகச் சேவையைக் கைப்பற்ற நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ உட்படப் பல தனியார் நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது.
சிட்டிகுரூப் கிரெடிட் கார்ட் வர்த்தகத்தை எஸ்பிஐ கைப்பற்றத் திட்டமிட்டு வருகிற செய்தி வெளியான நிலையில் எஸ்பிஐ கார்ட்ஸ் அண்ட் பேமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 6.68 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் ஒரு பங்கு விலை 915.80 ரூபாயில் துவங்கி 981.40 ரூபாய் வரையில் உயர்ந்தது.
இந்தியாவில் மிகப்பெரிய கிரெடிட் கார்டு வர்த்தகத்தை வைத்துள்ள ஹெச்டிஎப்சி மீது ரிசர்வ் வங்கி புதிய வர்த்தகத்தைக் கைப்பற்றத் தற்காலிக தடை விதித்துள்ள நிலையில் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தகத்தைக் கைப்பற்றும் போட்டியில் இருந்து விலகியுள்ளது.
மேலும் ஆர்பிஎல், ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி போன்று வளர்ந்து வரும் வங்கிகளும் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தகத்தைக் கைப்பற்றக் கடுமையாகப் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கைப்பற்றுவதன் மூலம் பல வருட உழைப்பை நொடிகளில் பெறும் வாய்ப்பாகு இருக்கும்.
இதேபோல் சிட்டி வங்கி தனது நுகர்வோர் சேவையில் இருக்கும் வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்யாமல் ஒவ்வொரு வர்த்தகத்தையும் தனித்தனி வங்கிகளிடம் விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளது என Macquarie கேப்பிடல் நிறுவனத்தின் ஆராய்ச்சி ஆய்வாளர் சுரேஷ் கணபதி தெரிவித்துள்ளார்.