டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் வங்கியில் 411 கோடி ரூபாய் கடனை பெற்று விட்டு, கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து எஸ்பிஐ வங்கி அளித்த புகார், ராம்தேவ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் 3 இயக்குனர்கள் நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா ஆகியோர் வங்கிகளில் 411 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளனர்.
எஸ்பிஐ-யில் கடன்
மேலும் ராம் தேவ் இண்டர் நேஷனல் நிறுவனம் பாஸ்மதி அரிசியை மேற்கு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தது. இதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 173 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தது. இது தவிர கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் பேங்க் என மொத்தம் 411 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மற்ற வங்கிகளில் கடன்
குறிப்பாக கனரா வங்கி 76.09 கோடி ரூபாயும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா 64.31 கோடி ரூபாயும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 51.31 கோடி ரூபாயும், கார்ப்பரேஷன் பேங்க் ஆப் இந்தியா 36.91 கோடி ரூபாயும், ஐடிபிஐ பேங்கில் 12.27 கோடி ரூபாயும் கடன் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அரிசி ஆலைகள்
மேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான மிகப்பெரிய 3 அரிசி ஆலைகள் மற்றும் 8 அரிசி ஆலைகள் இயங்கி வந்தன. மேலும் சவுதி அரேபியா, துபாய் நாடுகளில் தங்கள் அலுவலகத்தையும் ராம் தேவ் நிறுவனம் செயல்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய கடனை ராம் தேவ் நிறுவனம் செலுத்தாதையடுத்து, கடந்த 2016 ஜனவரி 17ம் தேதி அந்தக் கடனை வாராக்கடனாக எஸ்பிஐ அறிவித்தது.
எஸ்பிஐயில் வாராக்கடன்
நாட்டை விட்டு தப்பிச் சென்ற பின் அவர்கள் மீது எஸ்பிஐ வங்கி புகார் கொடுத்தாலும் தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாத நிலையே இருந்து வருகிறது. கடந்த 2016ல் எஸ்பிஐ ராம் தேவ் இண்டர்நேஷனல் கடனை வாராக்கடனாக அறிவித்தாலும், எஸ்பிஐ நீதிமன்றத்தை அணுக 4 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது.
விஜய் மல்லையா, நிரவ் லிஸ்டில் மீண்டும் 3 பேர்
கடந்த 2016ம் ஆண்டிலேயே நடத்திய ஒர் ஆய்வில் கடன் வாங்கியவர்கள் கிடைக்கவில்லை. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி லிஸ்டி அடுத்த மூன்று பேர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளி நாடுகளுக்கு தப்பி சென்றவர்களை இந்தியா அழைத்து வர முடியாமல் தவிக்கும், தற்போது இவர்களை எப்படி அழைத்து வர போகிறார்களோ தெரியவில்லை.