டெல்லி: நாட்டின் முதன்மை கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வாராக்கடன் அளவு கடந்த மார்ச் 2019ம் ஆண்டுடன் முடிவடைந்த காலாண்டில், ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட 11,932 கோடி ரூபாய் குறைந்துள்ளது என அவ்வங்கி பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கடந்த 2019ம் நிதியாண்டில் எஸ்பிஐயின் வாரக்கடன் அளவு 1,84,682 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தது. இதே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், தனது மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 1,72,750 கோடி ரூபாய் என வங்கி வெளியிட்டுள்ளது. இதன் படி 11,932 கோடி ரூபாய் குறைந்துள்ளது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, நிகர வாரக்கடன் அளவு 77,827 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தது என எஸ்பிஐ கூறியுள்ளது. இதே எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 65,895 கோடி ரூபாயா நிகர வாரக்கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வாராக்கடன் அளவு மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது காலாண்டிற்கான மொத்த வாராக்கடன் விகிதம் 3,143 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதே நிகர வாராக்கடன் விகிதம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 687 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மார்ச் 2019-வுடன் முடிவடைந்த காலாண்டில் எஸ்பிஐ-யின் நிகரலாபம் 862 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக நஷ்டத்தில் இருந்த நாட்டின் முன்னணி வங்கி, கடந்த 2019ம் நிதியாண்டில் லாபத்திற்கு திரும்பியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் அதிகரிப்பும், சொத்து மதிப்பும் தான் என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 18.03 சதவிகிதம் அதிகரித்து 88,349 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 74,854 கோடி ரூபாய் நிகர வட்டி வருவாயை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே வாரக்கடன்களின் அளவும் முந்தைய ஆண்டினை விட குறைந்துள்ளதாகவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியின் பங்கு விலையானது 1 சதவிகிதம் குறைந்து 313 ரூபாயாக முடிவடைந்துள்ளது.