இந்திய வங்கிகளில் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் இதைச் சிறப்பான முறையில் கையாள வேண்டும் என்பதற்காகவும், வங்கிகளின் நிதிநிலையைக் குறுகிய காலகட்டத்தில் மேம்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்திலும் இருக்கும் காரணத்தால், பட்ஜெட் அறிவிப்பில் மத்திய அரசு வாராக் கடன் வங்கியை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தது.
இதேவேளையில் கொரோனா தொற்றின் முதல் அலை கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனா 2வது அலை இதை மேலும் மோசமாக்கியுள்ளது. இதனால் வாராக் கடன் வங்கிகளை உருவாக்கும் பணி வேகமெடுத்துள்ளது.
பத்மகுமார் மாதவன் நாயர் - புதிய தலைவர்
இந்திய வங்கிகளின் வாராக் கடனை நிர்வாகம் செய்யவும், விரைவில் தீர்வு காணவும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கு இணைந்து உருவாக்கும் இப்புதிய வாராக் கடன் வங்கி அல்லது National Asset Reconstruction Company (NARC) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பத்மகுமார் மாதவன் நாயர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இவர் தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் stressed assets நிர்வாகம் செய்யும் பிரிவின் தலைமை பொது மேலாளர் ஆக உள்ளார்.
5 வருடம் பணிக்காலம்
பத்மகுமார் இப்பதவியில் 5 வருடம் இருப்பார் என்றும் தேவைப்படுமாயின் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என்றும் இவரை நியமித்த இந்திய வங்கிகள் அமைப்பு (IBA)-ன் 5 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் முக்கியப் பொறுப்பு
இதற்கு முன் பத்மகுமார் மாதவன் எஸ்பிஐ வங்கியின் அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், எஸ்பிஐ கேப்பிடல் மார்கெட்ஸ் பிரிவின் உயர் துணைத் தலைவர் மற்றும் தலைவர் பதவிகளில் பணியாற்றியவர்.
20 வருடம் அனுபவம்
எஸ்ஐபி வங்கியில் சுமார் 20 வருடம் பணியாற்றியவர் என்பதாலும், இரு முக்கியப் பிரிவில் தலைவராகப் பணியாற்றியவர் என்பதால் இவரின் தேர்வு மிகவும் சிறப்பானது என்று கூறப்படுகிறது.
பட்ஜெட் அறிக்கை
பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பொதுத்துறையில் இருக்கும் வாராக் கடனை கைப்பற்றவும், நிர்வாகம் செய்யவும், அதற்கான தீர்வை விரைவில் காணவும் வாராக் கடன் வங்கி அமைக்க உருவாக்க உள்ளதாக அறிவித்த நாளில் இருந்து இந்திய வங்கிகள் நிம்மதியாக இருந்தது.
அதீத வாராக் கடன்
இதற்கு முக்கியக் காரணம் இந்திய வங்கிகளிலும், இந்தியப் பொதுத்துறை வங்கிகளிலும் வாராக் கடன் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் கொரோனா தொற்றுக் காரணமாகப் பல லட்சம் பேர் கடனை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு வாராக் கடன் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்
முதற்கட்டமாகப் பத்ம குமார் மாதவன் தலைமை வகிக்கும் NARC அமைப்பு சுமார் 70 கணக்குகளில் விரிந்திருக்கும் 2 முதல் 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடனுக்குத் தீர்வுக் கான திட்டமிட்டுள்ளது.