அமெரிக்க சீன வர்த்தகம் தொடர்பான பேச்சுக்கள், ஃபெட் ரேட் முடிவுகள், இங்கிலாந்து தேர்தல் என போதுமான சர்வதேச காரணிகள் இந்திய சந்தைகளை பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றன.
அதே போல, அரசுக்கு வரி வருவாய் குறைந்து இருப்பது, பணவீக்கம் அதிகரித்து இருப்பது, மந்தமான பொருளாதார வளர்ச்சி, வரும் வாரங்களில் வெளி வரும் சில்லறை பணவீக்கம், மொத்த விலை பணவீக்கம், தொழில் துறை உற்பத்தி என பல விஷயங்கள் சந்தையின் போக்கை தீர்மானிக்க இருக்கின்றன.
நாம் ஏற்கனவே சொன்னது போல, சென்செக்ஸ் டே சார்ட் பேட்டனில் 28 நவம்பர் 2019 அன்றைக்கு, ஒரு மிக சரியான ஹேமர் பேட்டன் உருவானதால், 41,000 ஒரு வலுவான சப்போர்ட்டாகத் தெரியவில்லை எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே நவம்பர் 29 நவம்பர் தொடங்கி இன்று வரை ஒரு நாள் கூட சென்செக்ஸ் 41,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவு அடையவில்லை.
அதோடு மிக முக்கியமாக, சென்செக்ஸ் கடந்த மூன்று நாட்களாக 40,500 புள்ளிகளுக்கு மேல் கூட வர்த்தகம் நிறைவடையவில்லை. எனவே இனி 40,500 புள்ளிகளைக் கூட ஒரு வலுவான சப்போர்ட்டாக நம்ப முடியாது. இப்போது சென்செக்ஸ் 40,125 புள்ளிகளை சப்போர்ட் எடுத்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ஒருவேளை சந்தை நாளை, ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், 40,500 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும். 40,650 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.
டெக்னிக்கலாக, சென்செக்ஸின் டே சார்ட்டில், எலியட் வேவ் தியரி படி பார்த்தால் இப்போது இறக்க டிரெண்டு முடிந்து ஒரு குட்டி ஏற்றம் வர வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் டெக்னிக்கலாக குறைவாகவே இருக்கின்றன.
எனவே தற்போதைய சூழலில் சந்தை மேலும் இறக்கம் காணத் தொடங்கினால் 40,125 புள்ளிகளை முதல் சப்போட்டாக வைத்துக் கொள்வோம். 40,000 புள்ளிகளை அடுத்த வலுவான சப்போட்டாக வைத்துக் கொள்வோம். ஏதாவது நல்ல செய்தி வந்து ஒரு நல்ல ஏற்றம் காணவில்லை என்றால்... சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைக் கூட உடைத்துக் கொண்டு கீழே போகலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 40,487 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,588 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,239 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 247 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 11,950 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,856 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 80 புள்ளி இறக்கம் கண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,705 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 811 பங்குகள் ஏற்றத்திலும், 1,723 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,705 பங்குகளில் 41 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 209 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ஈஷர் மோட்டார்ஸ், சிப்லா, பஜாஜ் ஃபனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜி எண்டர்டெயின்மெண்ட், யெஸ் பேங்க், கெயில், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பவர் க்ரிட் கார்ப் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.