ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் வெளியாவதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை காலை முதல் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 44,632.65 புள்ளிகளை அடைந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே 100 புள்ளிகள் அளவீட்டில் உயர்ந்தது.
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் வெளியாவதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகள் உயர்ந்து முதல் முறையாகச் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளைத் தாண்டி 45,033.19 புள்ளிகளை அடைந்து சாதனை படைத்தது.
நிஃப்டி
இதேபோல் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 13,250 புள்ளிகளை அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. காரணம் ரிசர்வ் வங்கியின் முடிவுகள் தான்.
சரிவு
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவில் நாட்டின் பணவீக்கம் மற்றும் டிமாண்ட் குறைவாக இருக்கும் காரணத்தால் ரெப்போ விகித்தை குறைக்கவில்லை. இதன் வாயிலாகச் சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 44,900 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் கணிசமான சரிவை எதிர்கொண்டது.
ரிசர்வ் வங்கி முடிவுகள்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த 6வது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் நாட்டின் ரீடைல் பணவீக்கம் மற்றும் சந்தையின் டிமாண்ட் ஆகிய முக்கியக் காரணங்களை முன்வைத்து வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை.
6வது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் 4 சதவீதமாகத் தொடர முடிவு செய்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி கணிப்பு
ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் முடிவில் பொருளாதார வளர்ச்சி -9.5 சதவீத அளவில் இருக்கும் என முன்பு கணித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி இன்றைய நாணய கொள்கையில் 2021நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
3வது காலாண்டு பணவீக்கம்
இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கி இலக்கை விடவும் அதிகமாக இருக்கும் நிலையில் 2021 நிதியாண்டின் 3வது காலாண்டில் நுகர்வோர் பணவீக்கம் அளவீடு 6.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது.