திங்கட்கிழமை காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து சரிவு பாதையில் உள்ளதற்கு மிக முக்கியக் காரணமாக அமெரிக்கச் சந்தை விளங்குகிறது. அமெரிக்காவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பைச் சரி செய்ய அமெரிக்க அரசு சுமார் 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் வாயிலாக அமெரிக்கப் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் அளவீடுகள் சுமார் 13 மாத உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதன் வாயிலாக இந்தியச் சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறி அமெரிக்கப் பத்திர முதலீட்டுச் சந்தையில் குவிந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா
இதேவேளையில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் எப்போது வேண்டுமானாலும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்படும் அச்சம் நிலவும் காரணத்தாலும் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை வெளியேற்றி வருகின்றனர்.
மீண்டும் லாக்டவுன்
இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் வர்த்தகம், உற்பத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவை கடுமையாகப் பாதிக்கும் இதனால் பங்குச்சந்தை பெரிய அளவில் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய சந்தை தடுமாற்றம்
இதன் எதிரொலியாக இன்றைய ஆசிய சந்தை வர்த்தகத்தில் சீனா மற்றும் இந்தியச் சந்தைகள் அதிகளவிலான வர்த்தகச் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இதோடு ஹாங்காங், தைவான், ஆஸ்திரேலியா சந்தைகள் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வர்த்தகம் செய்கிறது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையில் இன்று மதியம் 12.30 மணி வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 870 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 250 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டது. இந்திய சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள தடுமாற்றம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரிகிறது.