2020 இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு ஆண்டாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.
2019ல் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மந்தமாக இருந்த நிலையில் 2020ல் மிகப்பெரிய நம்பிக்கையுடன் துவங்கியது. ஆனால் கொரோனா தொற்றும் அதன் பின்பு அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகளின் எதிரொலி மும்பை பங்குச்சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் மும்பை பங்குச் சந்தை மார்ச் மாதம் எதிர்கொண்ட மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டு 2020ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சிறப்பான வளர்ச்சி பதிவு செய்து புதிய வரலாற்று உச்சமான 47,896.97 புள்ளிகளை அடைந்தது.
இதேபோல் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் வெறும் 0.20 சதவீத சரிவை எதிர்கொண்டாலும் 14,000 புள்ளிகளைத் தாண்டி 14,024 புள்ளிகளை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 2020ஆம் ஆண்டு வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 15 சதவீத உயர்வையும், நிஃப்டி குறியீடு 14.9 சதவீத உயர்வையும் அடைந்துள்ளது.
இதேவேளையில் சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பங்குச்சந்தையின் 25 வருடப் பயணத்தைக் குறித்து மோதிலால் ஆஸ்வல் பைனான்ஸ் சர்வீசஸ் ஒரு முக்கிய ஆய்வு செய்து அறிக்கையில் கடந்த 25 வருடத்தில் அதாவது 1995 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பங்குச்சந்தையில் வேகமாகச் செல்வத்தை உருவாக்கிய நிறுவனமாக இன்போசிஸ்-ஐயும், மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐயும் அறிவித்துள்ளது.
1995 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இன்போசிஸ் ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சியுடன் வேகமாகச் செல்வத்தை உருவாக்கிய நிறுவனமாகத் திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 688 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இக்காலகட்டத்தில் வெறும் 300 கோடி ரூபாயில் இருந்து 2.73 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 25 வருட வர்த்தகத்தில் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கிய நிறுவனமான விளங்குகிறது. சுமார் 6.3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டுக்கு உயர்ந்துள்ள ரிலையன்ஸ், 2015 முதல் 2020ஆம் ஆண்டுக் காலத்தில் மட்டும் சுமார் 4.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.