சீனாவில் மக்கள் போராட்டம் உச்சத்தைத் தொட்ட நாளில் இருந்தும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த நிலைப்பாடு, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து வருகிறது.
இதேபோல் இந்த ரெசிஷன் அச்சம் நிறைந்த காலகட்டத்தில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் இந்தியாவில் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்ற கணிப்பு சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தான் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளார்.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 480 புள்ளிகள் வரையில் அதிகரித்துப் புதிய வரலாற்று உச்ச அளவான 63583.07 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு இன்று அதிகப்படியாக 18,887.60 புள்ளிகள் எட்டியுள்ளது.
பெடரல் ரிசர்வ்
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு வட்டி விகித உயர்வுகளின் வேகத்தைக் குறைப்பதாகச் சுட்டிக்காட்டினார். இதனால் இந்த மாதம் வட்டி உயர்வு இருக்கும் ஆனால் அதிகமாக இருக்காது என்று கணிக்கப்பட்டு உள்ளது.
முதலீட்டாளர்கள்
மேலும் டிசம்பர் மாதத்திற்குப் பின் வட்டி விகித உயர்வின் வேகத்தைக் குறைக்க உள்ளதாக உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் Near Term முதலீட்டாளர்கள் அனைவரும் அதிகளவிலான முதலீட்டை இந்தியச் சந்தை பக்கம் திருப்பியுள்ளனர். இதன் எதிரொலியாக வியாழக்கிழமை வர்த்தகம் திறந்த உடனே சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
நிஃப்டி ஐடி குறியீடு
நிஃப்டி ஐடி குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக வளர்ச்சி அடைந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி கொடுத்த துறைகளில் ஐடி துறை முதலிடத்தில் உள்ளது. நிஃப்டி ஐடி குறியீடு 2.1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து, ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
நாஸ்டாக் காம்போசிட்
அமெரிக்காவில் தொழில்நுட்பம் சார்ந்த நாஸ்டாக் காம்போசிட் குறியீடு அமெரிக்காவின் புதன்கிழமை வர்த்தகத்தில் சிறப்பான உயர்வை சந்தித்த நிலையில், இன்று காலை இந்திய சந்தையில் இந்த உயர்வைப் பிரதிபலிக்கிறது.
நிஃப்டி சந்தை
மேலும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.6 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் நிஃப்டி மிட்கேப் 100 குறைவான அளவிலான உயர்வை மட்டுமே பதிவு செய்து 0.3 சதவீதம் மட்டுமே உயர்ந்தது.
ஜெரோம் பவல்
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் பேச்சுக்கு பின்பு சந்தை மீதான நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு அதிகரித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் டெக் பங்குகள் உயரும் அளவிற்கு நிலை மாறியுள்ளதால் அமெரிக்காவில் ரெசிஷன் அச்சம் குறைந்துள்ளதாகவே தெரிகிறது.
வால் ஸ்ட்ரீட்
இதன் எதிரொலியாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் புதன்கிழமை வர்த்தகத்தில் கூர்மையாக உயர்வை பதிவு செய்துள்ளது. டாலர் ஆதிக்கம் குறைந்துள்ளது உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. இதன் செயின் ரியாக்ஷன் ஆக ஆசிய சந்தைகளும் உயர்ந்தன, ஜப்பான் குறியீடு 1.6% உயர்ந்தது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.2 சதவீதம் வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளதாகப் புதன்கிழமை வெளியான தரவுகள் கூறுகிறது.
டாலர் சரிவு
டாலர் சரிவால் கச்சா எண்ணெய் விலை உயரத் துவங்கியது. பலவீனமான டாலர் மற்றும் சீனாவில் கச்சா எண்ணெய் தேவையில் ஏற்பட்ட தேக்கம் ஆகியவை முதலீட்டுச் சந்தையைப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
OPEC+ அமைப்பு
அதே நேரத்தில் OPEC+ அமைப்பு தனது கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகளில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் உள்ளது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.