மும்பை பங்குச்சந்தை தடுமாறினாலும் தொடர் வளர்ச்சி பாதையில் இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்து வந்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியான அமெரிக்கா பணவீக்க தரவுகள் மும்பை பங்குச்சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் கணிப்புகளை விடவும் அதிகமான பணவீக்க அளவீடுகளைப் பதிவு செய்த காரணத்தால் அமெரிக்கப் பங்குச்சந்தை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை புதன்கிழமை காலை வர்த்தகத்தில் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது.
அமெரிக்கப் பணவீக்கம்
ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் 8 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்நாட்டு லேபர் டிபார்ட்மென்ட் 8.3 சதவீதம் என அறிவித்தது. இது ஜூன் மாத உச்ச அளவான 9.1 சதவீதத்திற்கு அருகில் உள்ளது, ஆகஸ்ட் மாதம் எரிபொருள் பணவீக்கம் 10.6 சதவீதமாகக் குறைந்த போதிலும் அமெரிக்காவின் பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆசிய சந்தை
இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் ஜப்பான், ஹாங்காங், சீனா, தென் கொரியா, தைவான், ஆஸ்திரேலியா ஆகியவை பெரும் சரிவுடன் துவங்கியது. இந்தச் சரிவுக்கு ஆதாரமாக விளங்கியது அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் குறியீட்டின் 1200 புள்ளிகள் சரிவு தான். ஜூன் 2020-க்கு பின்பு மோசமான சரிவாகும்.
பெடரல் வங்கி
அமெரிக்கப் பணவீக்க உயர்வால் பெடரல் வங்கி மீண்டும் வட்டியை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்படலாம், இதேவேளையில் OPEC அமைப்பும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டு இதன் விலையை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது.
ஐரோப்பா, பிரிட்டன்
ஐரோப்பா, பிரிட்டன் அடுத்தடுத்து வட்டியை உயர்த்தி வரும் நிலையில் இந்த மாத இறுதியில் இந்தியாவும் 0.50 சதவீத வட்டியை உயர்த்த திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் அமெரிக்காவும் விரைவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை உயர்ந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள்
இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் பெரும் சரிவில் இருந்து தப்பிக்க அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்யும் காரணத்தால் இன்று சென்செக்ஸ் காலை வர்த்தகத் துவக்கத்தின் போது 1,150 புள்ளிகள் சரிந்து 59,417.12 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் என்எஸ்ஈ குறியீடு 180 புள்ளிகள் சரிந்து 17,887.70 புள்ளிகளை எட்டியது.
3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
இதனால் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு மதிப்பை இழந்தனர், இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 286.71 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 284 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications