சற்றும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு முதலீட்டாளர்களை ரத்த கண்ணீர் வடிக்கச் செய்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை கடந்த ஒரு மாத காலத்தில் பல போராட்டங்களைத் தாண்டி பெரும் சரிவில் இருந்து மீண்டு சென்செக்ஸ் 50,000 புள்ளிகளைத் தொட்டது, ஆனால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1,400 புள்ளிகள் வரையில் சரிந்த காரணத்தால் 50,000 புள்ளிகள் நிலையில் இருந்து சரிந்தது.
இந்தத் திடீர் சரிவுக்கு என்ன காரணம்..?!
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1391 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதனால் சென்செக்ஸ் குறியீடு 48,580 புள்ளிகள் வரையில் இறங்கியது. இதேபோல் நிஃப்ட் குறியீடு 400 புள்ளிகள் வரையில் சரிந்து 14,479.30 புள்ளிகளை அடைந்துள்ளது. இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்..?!
பங்குச்சந்தை வர்த்தகம் தடுமாற்றம்
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகக் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று புதிய உச்சமாகக் கொரோனா தொற்று எண்ணிக்கை 1,00,000-ஐ தொட்டு உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் மனநிலை
இதன் வாயிலாக முதலீட்டாளர்கள் பெரிய சரிவில் இருந்து தப்பித்துக்கொள்ள முன்கூட்டியே அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர். இதன் வாயிலாகத் தான் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அதிகளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம்
இந்தியாவில் இதுவரை 1.25 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், சுமார் 1,65,000 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் நாட்டின் நிதியியல் தலைநகரமாக இருக்கும் மகாராஷ்டிராவில் தற்போது பதிவாகியிருக்கும் 1,00000 கொரோனா கேஸ்-களில் சுமார் 57,074 பேர் இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஏப்ரல் 30 வரை புதிய கட்டுப்பாடுகள்
இதன் வாயிலாக மகாராஷ்டிர மாநில அரசு ஏப்ரல் 30 வரையில் இரவு நேரத்திலும், வார இறுதி நாட்களிலும் லாக்டவுன் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் அதிகளவிலான வர்த்தக வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி தான் இன்றைய பங்குச்சந்தை சரிவு.
volatility index அளவு
இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஏற்பட்டுள்ள மாபெரும் தடுமாற்றத்தின் வாயிலாக இந்தியாவின் VIX அளவீடு 14 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இது பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் volatility index ஆகும்.
நாணய கொள்கை கூட்டம்
இதேவேளையில் வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஏப்ரல் 5 முதல் 7ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தின் முடிவுகள் பல முக்கிய மாற்றங்களை இந்தியச் சந்தையில் ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை. இக்கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்க அதிக வாய்ப்புகள் இல்லாத நிலையில் புதிய கொரோனா தொற்று கணிசமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
வங்கித்துறை பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் வங்கிகள் அளித்துள்ள கடன்கள் பெருமளவில் திரும்பக் கிடைக்க வாய்ப்புகள் குறையும்.
டாலர் ரூபாய் மதிப்பு
இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 73.39 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்குப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறியுள்ள அதிகப்படியான வர்த்தகப் பாதிப்பு மிக முக்கியக் காரணமாக உள்ளது.