அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் விலை மாற்றம் ஆகியவை இந்திய பங்குச்சந்தையில் இன்று பெரிய அளவில் பாதித்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு துவங்கும் போதே யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 350 புள்ளிகள் வரையில் சரிந்தது.
இந்தச் சரிவால் முதலீட்டாளர்கள் சோகம் அடைந்த நிலையில் ரூபாய் மதிப்பு மற்றும் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து எதிரொலி காரணமாகப் பெரும் சரிவில் இருந்து மீண்டு வர துவங்கியுள்ளது என்றாலும் சரிவில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தொடர்ந்து 450 புள்ளிகளை தாண்டி சரிவடைந்து வருகிறது.
அமெரிக்கப் பங்குச்சந்தை
அமெரிக்கப் பங்குச்சந்தையின் வியாழக்கிழமை வர்த்தக முடிவில் டாவ் ஜோன்ஸ் 0.22 சதவீதமும், எஸ் அண்ட் பி 0.38 சதவீதமும், நாஸ்டாக் 0.12 சதவீதம் எனச் சரிவை எதிர்கொண்டது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவின் புதிய அதிபராகும் ஜோ பிடனின் கொரோனா உதவி திட்டத்தின் வெளியீட்டில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் வாயிலாகவே அமெரிக்கப் பங்குச்சந்தை குறியீடுகள் சரிவடைந்துள்ளது.
ஆசியச் சந்தை
அமெரிக்கப் பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆசியச் சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜப்பான் நிக்கி குறியீடு 0.2 சதவீதமும், தென் கொரியா கோஸ்பி 1 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியா சந்தைகள் 0.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்தத் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க OPEC அமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை உயரத் துவங்கியது. இந்நிலையில் புதிதாகக் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் நாட்டின் பல பகுதிகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள சீனா திடீரென அதிகளவில் கச்சா எண்ணெய்-ஐ இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளது.
இது கச்சா எண்ணெய் சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரெண்ட் கச்சா எண்ணெய் 3 சென்ட்கள் குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்கா டாலர் மதிப்பு கடந்த சில வாரங்களாகவே அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இந்திய முதலீட்டுச் சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த 3 நாட்களாக ரூபாய் மதிப்பு தொடர் உயர்வை அடைந்து 74.38 ரூபாயில் இருந்து 73 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சரிவு உடன் துவங்கியது. இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரையில் சரிந்தது.
ஆனால் சில நிமிடங்களில் உள்நாட்டுச் சந்தை முதலீடுகள் அதிகரித்த காரணத்தால் சென்செக்ஸ் 350 பள்ளிகள் சரிவில் இருந்து 200 புள்ளிகள் உயர்ந்து 150 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் செய்யத் துவங்கியது.
நிப்டி குறியீடு
இதேபோல் நிப்டி குறியீடு சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே சரிவில் துவங்கி அதிகப்படியாக 100 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
டாப் 30 நிறுவனங்களின் நிலை
இன்றைய வரத்தகத்தில் ஹெச்டிஎப்சி, கோட்டாக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டி, ஹெச்சிஎல், அல்ட்ரா டெக், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு மோசமான நிலையை அடைந்துள்ளது.
ஆனால் யாரும் எதிர்பார்காத நிலையில ஏர்டெல் நிறுவனங் பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.