ஷிவ் நாடார் தலைமையில் 1976ஆம் ஆண்டு 6 நண்பர்கள் உடன் இணைந்து டெல்லியில் துவங்கப்பட்ட ஒரு குட்டி நிறுவனம் தான் ஹிந்துஸ்தான் கம்பியூட்டர் லிமிடெட். இன்று இந்நிறுவனம் HCL சாம்ராஜ்யமாகப் பல பிரிவுகளில் மாபெரும் வளர்ச்சியை அடைந்து சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டைப் பெற்று உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்த மாபெரும் வெற்றியின் ஆரம் புள்ளி எது தெரியுமா..?
தமிழ்நாடு டூ புனே
1945ஆம் ஆண்டுத் திருச்செந்தூரில் பிறந்த ஷிவ் நாடார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேச்சுலர் டிகிரியும், கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டமும் பெற்றார்.
இதன் பின்பு 1967ஆம் ஆண்டுப் புனே-வில் இருக்கும் வால்சந்த் குரூப்-ன் காப்பர் இண்ஜினியரிங் நிறுவனத்தில் தனது முதல் வேலையைத் துவங்கினார்.
நிதி திரட்டல்
வேலையில் இருக்கும்போதே வியாபாரம் செய்யத் திட்டமிட்ட ஷிவ் நாடார், டிஜிட்டல் கால்குலேட்டர் விற்பனை செய்யத் திட்டமிட்டு மைக்ரோகார்ப் என்ற நிறுவனத்தைத் தற்போதைய ஹெச்சிஎல் நிறுவனத் தலைவர்களான அஜய் சவுத்ரி, அர்ஜூன் மல்ஹோத்ரா, சுபாஷ் அரோரா, யோகேஷ் வைத்தியா, டிஎஸ் பூரி ஆகியோர் உடன் இணைந்து துவ்கினார்.
புதிய வாய்ப்பு
இந்தியாவில் அமல் செய்யப்பட்ட புதிய தொழிற்கொள்கைகள் எதிரொலியாக மைக்ரோ கம்பியூட்டர் பிரிவில் இருந்த ஐபிஎம் இந்தியாவை விட்டு வெளியேறியது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தத் திட்டமிட்ட ஷிவ் நாடார் தனது நண்பர்கள் உடன் இணைந்து சுமார் 1.87 லட்சம் ரூபாய் நிதியைத் திரட்டி 1976ல் ஹிந்துஸ்தான் கம்பியூட்டர் லிமிடெட் நிறுவனத்தைத் துவங்கினார்.
ஹிந்துஸ்தான் கம்பியூட்டர் லிமிடெட்
ஆரம்பம் முதலே ஹெச்சில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகத் தரத்தில் கம்பியூட்டர்களைத் தயாரித்து வந்தது. குறிப்பாக 1988இல் பல புதிய சிப்கள் இணைத்து ஹெச்சில் UNIX இயங்குதளம் கொண்ட கம்பியூட்டர்களைத் தயாரித்தது. இதை ஹெச்பி, மற்றும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் தான் தயாரிக்கத் துவங்கியது. அந்த அளவிற்கு ஹெச்சிஎல் நிறுவனம் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்தது.
வெளிநாட்டுத் திட்டம்
இந்தக் காலகட்டத்திலேயே ஷிவ் நாடாருக்கு அமெரிக்காவின் கலிப்போர்னியாவில் கம்பியூட்டர் தயாரித்து அதை அமெரிக்கா முழுவதும் வர்த்தகம் செய்ய வேண்டும் எனத் திட்டமும் ஆசையும் இருந்தது. அது நடந்திருந்தால் இன்று ஷிவ் அவர்களின் கனவு திட்டம் மகிப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து நிறுவனத்தின் மதிப்பு 500 பில்லியன் டாலர் வரையில் வளர்ச்சி அடைந்திருக்கும் என்று ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் வினித் நாயர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் ஷிவ் நாடார் கனவுகளைப் பார்க்கும் போது அவர் தவறான நாட்டில் பிறந்துவிட்டார் எனத் தான் அடிக்கடி நிறுவன தலைவர்களிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரிஜினல் மேக் இன் இந்தியா தொழிலதிபர்
இந்தியாவில் தயாரித்து வெளிநாட்டு வரையிலும் வர்த்தகம் செய்யவும், அதற்கான தேவையை உருவாக்கியுள்ளவர் தான் ஷிவ் நாடார். இவர் தான் ஒரிஜினல் மேக் இன் இந்தியா தொழிலதிபர் என்றும் வினித் நாயர் கூறியுள்ளார்.
ஐடி
கம்பியூட்டர் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வந்த ஹெச்சிஎல் 2000ல் ஐடி சேவை துறையில் நுழைந்து அதிலும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு சாதனை படைத்துள்ளார் ஷிவ் நாடார்.
20 பில்லியன் டாலர்
வெறும் 1.87 லட்சம் ரூபாயில் துவங்கப்பட்ட ஹெச்சிஎல் நிறுவனம் இன்று 20 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டு உடன் கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த லாப அளவீடு 7.3 சதவீதம் குறைந்து 2,925 கோடி ரூபாயாக உள்ளது. வருடாந்திர அடிப்படையில் இந்நிறுவனத்தின் லாபம் 31.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.