இந்திய ஐடி சேவை துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து, தற்போது நாட்டின் டாப் 5 நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரான ஷிவ் நாடார் தனது சேர்மன் பதவியில் இருந்து இறங்கி ஹெச்சிஎல் நிர்வாகத்தின் மூலோபாய ஆலோசகர் மற்றும் சேர்மன் எமரிட்டஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த மாற்றத்தின் மூலம் ஹெச்சிஎல் நிர்வாகம் முழுவதும் தற்போது ஷிவ் நாடாரின் ஓரே மகளான ரோஷினி நாடார் கையில் சென்றுள்ளது. இந்தியாவில் டாப் ஐடி நிறுவனங்களில் பெண் தலைவராக இருக்கும் ஓரே நிறுவனம் ஹெச்சிஎல் தான்.
ஹெச்சிஎல் நிறுவனம்
ஹெச்சிஎல் நிர்வாகத்தைக் கடந்த வருடமே ரோஷினி நாடார் கையில் கொடுத்த ஷிவ் நாடார், தற்போது நிர்வாகத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவில் இருந்தும் விலகியுள்ளார். இதன் மூலம் 76 வயதான ஷிவ் நாடார் தற்போது நேரடி நிர்வாக முடிவுகள் எடுக்கும் இடத்தில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
ஷிவ் நாடார் பதவி
இதேவேளையில் ஷிவ் நாடார் வகித்து வந்த நிர்வாகத் தலைவர் பதவியில், இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ-வாக இருக்கும் சி.விஜயகுமார்-ஐ ஜூலை 20 முதல் அடுத்த 5 வருடத்திற்குச் சிஇஓ பதவியுடன் நிர்வாகத் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெச்சிஎல் நிர்வாகம்
திங்கட்கிழமை ஹெச்சிஎல் நிறுவனம் பங்குச்சந்தைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷிவ் நாடார் தனது சேர்மன் பதவியில் இருந்து இறங்கி ஹெச்சிஎல் நிர்வாகத்தின் மூலோபாய ஆலோசகர் மற்றும் சேர்மன் எமரிட்டஸ் பதவியில் இனி தொடர்வார் என்றும், புதிய நிர்வாக இயக்குனராகச் சி.விஜயகுமார் தொடர்வார் என்றும் தெரிவித்திருந்தது.
ஷிவ் நாடார் 5 வருட பதவிகாலம்
ஷிவ் நாடார்-ன் அனுபவம், அறிவு, தொலை நோக்கு பார்வை ஆகியவை ஹெச்சிஎல் நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கட்டாயம் தேவை என்பதால், ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் மூலோபாய ஆலோசகராக இணைந்துள்ளார். இவருடைய பதவி காலமும் ஜூலை 20ஆம் தேதி துவங்கி அடுத்த 5 வருடம் வரையில் மட்டுமே தொடரும் என ஹெச்சிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஷிவ் நாடார் சம்பளம்
மூலோபாய ஆலோசகர் மற்றும் சேர்மன் எமரிட்டஸ் பதவியில் நியமிக்கப்பட்டு உள்ள ஷிவ் நாடார்-க்கு அளிக்கப்படும் சம்பளம், உதவிகள், சேவைகள் அனைத்தும் நிர்வாகக் குழுவின் ஒப்புதலின் படி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.