இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் சில நாட்களுக்கு முன்பு வரையில் அதிகம் புலம்பிய ஒரு விஷயம் என்றால் அது பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான். மத்திய அரசு பல நெருக்கடிக்குப் பின்பு 3 மாநில இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தது.
தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்களை ஏன் ஜிஎஸ்டி வரி விதிப்பு செய்யப்படவில்லை எனக் கேரள உயர் நீதிமன்றம் ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு நோட்டீஸ் அனுப்பியது முதல், புதிய விவாதமாக நாடு முழுவதும் வெடித்துள்ளது.
இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் இதுகுறித்து எழுந்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு
பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு ஆதரவு தெரிவித்து, இணைப்பதற்கான திட்டத்தையும் முன்வைத்த போது சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனாலேயே இன்னும் சேர்க்கப்படவில்லை என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர மத்திய நிதியமைச்சர் புதிய திட்ட வரைவுகளை உருவாக்கி வருவதாகவும், இதற்கு மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தால் மத்திய அரசும் ஒப்புதல் அளித்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என நித்தின் கட்கரி வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி அமலாக்கம்
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு 4.5 வருடம் முழுமையாக முடிந்துள்ள நிலையிலும் ஒவ்வொரு ஜிஎஸ்டி கூட்டத்தில் வரி விதிப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுத் தொடர்ந்து மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
மறைமுக வரி விதிப்பு
ஆயினும் இன்னமும் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்கள் ஜிஎஸ்டி அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டும், வரி விதிக்கப்படாமல் தொடர்ந்து பழைய மறைமுக வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாநில அரசுகளின் வரி வருமானம்.
மத்திய அரசு
ஜிஎஸ்டி வரி வந்த பின்பு இந்தியாவில் வரி வசூல் அனைத்தும் மொத்தமாக மத்திய அரசு கைகளுக்கு நேரடியாகச் செல்கிறது. இதனால் வரி வருமானத்தில் மாநில அரசுக்கான ஆதிக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது, வரி பங்கீட்டுக்காக மத்திய அரசை எதிர்நோக்கி மாநில அரசுகள் காத்துக்கொண்டு இருக்கிறது
வரி பகிர்தல்
கடந்த சில ஆண்டுகளாகவே ஜிஎஸ்டி வரிப் பகிர்தலில் பெரிய அளவிலான வித்தியாசம் இருக்கும் காரணத்தால் வரி வருமானம் குறித்து மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் உடன் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
மாநில அரசு வரி ஆதாயம்
இந்தச் சூழ்நிலையில் மாநில அரசுக்கு வரி ஆதாயம் கிடைக்கும் ஒரு சில பொருட்களில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்கள் இருக்கும் காரணத்தால் இதை விட்டுக்கொடுக்க மறுக்கிறது மாநில அரசுகள். இதன் வாயிலாகத் தான் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர மறுக்கிறது.
மத்திய அரசுக்குத் தான் லாபம்
இந்த வாய்ப்பை பயன்படுத்திப் பெட்ரோல், டீசலில் மாநில அரசை விடவும் மத்திய அரசு தான் அதிக வரி விதித்து அதிகப்படியான வரி வருமானத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாகச் செஸ் வரி விதிப்பது மூலம் நேரடியாக மத்திய அரசின் கஜானாவுக்குப் பணம் கிடைக்கிறது.