சோன்பத்ரா, உத்திரப் பிரதேசம்: கடந்த சில நாட்களாக, இணையம் முதல் நாளிதழ்கள் வரை பெரிதும் பேசப்படும் விஷயம் என்றால், அது உத்திரப் பிரதேசத்தில் கிடைத்திருக்கும் தங்கம் தான்.
உத்திரப் பிரதேசத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான சோன்பத்ராவில் நிறைய தங்கம் கிடைத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.
இப்போது இந்த தங்கத்தை அரசு என்ன செய்யப் போகிறார்கள்..? இந்த தங்கத்தை வெட்டி எடுப்பது தொடர்பாக அரசு நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
தங்கம்
இந்த சோன் பத்ரா மாவட்டத்தில், சோன் பஹாடி என்கிற பகுதியில் நிறைய தங்கமும், ஹார்டி என்கிற பகுதியில் ஒரு கணிசமான அளவு தங்கமும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த் பகுதியில், தங்கம் மட்டுமின்றி, மற்ற சில கனிமங்களும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
லீஸ்
இந்த தங்க சுரங்கத்தை, லீஸுக்கு விடுவது குறித்து அதி விரைவாக ஆலோசித்து வருகிறார்களாம். மறு பக்கம், இந்த தங்க சுரங்கத்தை ஜியோ டேக்கிங் செய்து கொண்டு இருக்கிறார்களாம். கூடிய விரைவில் இந்த தங்க சுரங்கத்தை முழுமையாக எல்லைகளை வரையறுப்பதற்கான வேலை நடந்து கொண்டு இருக்கிறதாம்.
ஜியோ டேக்
புதிதாக, உத்திரப் பிரதேசத்தின் சோன் பத்ரா பகுதியில், கண்டு பிடிக்கப்பட்டு இருக்கும் தங்க சுரங்கத்தை ஜியோ டேக் செய்ய ஏழு அதிகாரிகள் கொண்டு குழுவை அமைத்து இருக்கிறார்கள். இந்த குழு வரும் பிப்ரவரி 22-க்குள் தன் அறிக்கையை, சுரங்கத் துறையிடம் சமர்பிப்பார்களாம்.
நிலப் பதிவுகள்
மறு பக்கம், சோன் பத்ராவின் புதிய தங்க மலை, வருவாய் துறையின் கீழ் எவ்வளவு நிலம் வருகிறது, வனத் துறையினரின் கீழ் எவ்வளவு நிலம் வருகிறது என கணக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த கணக்கு முழுமையாக முடிந்த பின், வனத் துறையினரிடம் இருந்து சுரங்கத் தொழில் செய்ய அனுமதி பெறபடுமாம்.
ஜி எஸ் ஐ சர்வே
Geological Survey of India (GSI) என்கிற அமைப்பு தான், சோன் பத்ராவில் தங்கம் இருப்பதைக் கண்டு பிடித்தார்கள். இப்போது, இரண்டு ஹெலிகாப்டர்கள் துணை உடன், இந்த அமைப்பு, தங்க குவாரி அமைய இருக்கும் இடத்தில், ஒரு ஏரியல் சர்வே நடத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.
மற்றும் ஒரு சர்வே
மேலே சொன்ன சர்வேக்கள் எல்லாம் போக, சோன் பத்ரா மாவட்டத்தின் பல பகுதிகளிலும், Electromagnetic மற்றும் Spectrometer கருவிகளுடன் ஒரு geophysical survey நடத்திக் கொண்டு இருக்கிறர்களாம். இதனால் சோன் பத்ரா மாவட்டத்தின் வேறு எந்த பகுதியிலாவது வேறு கனிமங்கள் இருக்கிறதா என்பதையும் கண்டு பிடிக்க உதவுமாம்.
டெண்டர்
மேலே சொன்ன எல்லா நடைமுறைகளும் நடந்து முடிந்த பின், தங்க சுரங்கத்தை ஒரு இன்ச் விடாமல் வரையறுத்த பிறகு, இந்த தங்க சுரங்கத்தை இ-டெண்டர் வழியாக டெண்டர் விடப் போகிறார்களாம். உண்மையாகவே அரசு இந்த தங்க சுரங்கத்தை டெண்டர் விட்டே ஆக வேண்டுமா..?
இதை செய்யலாமே
வேறு யாரோ ஒருவருக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ டெண்டர் கொடுத்து, தங்க சுரங்கத்தின் வேலைகளைச் செய்வதற்கு பதிலாக, அரசாங்கமோ அல்லது அரசு நிறுவனமோ இந்த தங்க சுரங்கத்தை எடுத்து நடத்தலாமே. அரசுக்கும், தங்கத்தினால் வரும் லாபம், லீஸ் தொகை எல்லாம் அதிகரிக்குமே.
நல்ல வாய்ப்பு
இந்த பல கோடி ரூபாய் தங்க புதையலை முறையாக பயன்படுத்திக் கொண்டால், பெரிய அளவில் இந்தியா மற்றும் உத்திரப் பிரதேசத்தின் பொருளாதாரத்தையே மேம்படுத்தி விடலாம். இந்த வாய்ப்பை, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசும், உத்திரப் பிரதேச மாநில அரசும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புவோம்.