சோன்பத்ரா என்கிற இந்தி சொல்லுக்கு, தங்கத்தால் நிறைந்திருக்கும் இடம் என்று பொருளாம்.
பெயருக்கு தகுந்தாற் போல, தங்கத்தால் தான் நிறைந்து இருக்கிறது போல சோன்பத்ரா.
இந்த சோன்பத்ரா எங்கு இருக்கிறது. இந்த இடத்தில் யார் எல்லாம் தங்கம் தேடி இருக்கிறார்கள் போன்ற சுவாரஸ்ய விவரங்களைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
சோன்பத்ரா
யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த மாவட்டத்தின் தனிச் சிறப்பு என்ன என்றால், இந்த மாவட்டம் மட்டும் 4 மாநில எல்லைகளைக் கொண்டது. மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பீகார். இதற்கு எல்லாம் மேல், இது மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியாம்.
தங்கம்
இந்த மாவட்டத்தில், சோன் பஹாடி என்கிற பகுதியில் ஒரு பெரிய அளவிலான தங்கமும், அதனைத் தொடர்ந்து ஹார்டி என்கிற பகுதியில் ஒரு கணிசமான அளவு தங்கமும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தங்கம் மட்டுமின்றி, மற்ற சில கனிமங்களும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
தேடுதல் வேட்டை
பிரிட்டிஷ்காரர்கள், இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போதே, இந்த சோன் பத்ரா பகுதியில் தங்கம் இருக்கலாம் என யூகித்து இருக்கிறார்கள். அந்த யூகத்தை சரி பார்க்க, பிரிட்டிஷ்காரர்களே, அன்றைய சோன் பத்ரா பகுதியில் தங்கத்தை தேடி அலைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கிடைக்கவில்லை
நல்ல வேளையாக பிரிட்டிஷ்காரர்கள் கையில் இந்த தங்கப் புதையல் சிக்கவில்லை. கிடைத்து இருந்தால் அன்றே பாறையோடு பாறையாக, மொத்த மலையையும் வெட்டி எடுத்து இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று இருப்பார்கள். இன்று சோன் பத்ராவில் கண்டு பிடித்து இருக்கும், ஒட்டு மொத்த தங்கத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் வரும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியர்கள் தேடல்
சோன்பத்ரா மாவட்டத்தின், மாவட்ட சுரங்க அதிகாரி கே கே ராய் "சுமாராக கடந்த இருபது ஆண்டுகளாக தங்கத்தைத் தேடி இந்தியாவின் Geological Survey of India (GSI) அமைப்பு உழைத்து இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார். 1992 - 93 கால கட்டத்தில் இருந்து தங்கத்தைத் தேடத் தொடங்கி இருக்கிறார்கள்" எனச் சொல்லி இருக்கிறார்.
வாய்ப்பு
இந்த பல கோடி ரூபாய் தங்க புதையலை முறையாக பயன்படுத்திக் கொண்டால், பெரிய அளவில் இந்தியாவின் பொருளாதாரத்தையே மேம்படுத்தி விடலாம். இந்த வாய்ப்பை, நம் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசும் அல்லது உத்திரப் பிரதேச மாநில அரசும் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.