டெல்லி: சில வருடங்களுக்கு முன், இந்தியாவின் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி தற்போது மத்திய அரசுக்கே பெரிய குடைச்சலைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது.
இத்தனை நாளாக மத்திய அரசின் ஆலோசனைகளைப் பின்பற்றி வந்த மாநிலங்கள் கூட, தற்போது தங்களுக்கான உரிமையை (ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையை) உரக்கச் சொல்லிக் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
என்ன ஜிஎஸ்டி பஞ்சாயத்து..? எத்தனை மாநிலங்கள் இப்படி குரல் எழுப்பி இருக்கின்றன..? வாருங்கள் பார்ப்போம்.
மாநில வருவாய்
கடந்த ஜூலை 2017-ல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்திய போதே, மாநிலங்களின் வருவாய் இழப்பை கணக்கில் எடுத்துக் கொள்வோம். மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு, ஒரு குறிப்பிட்ட நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுப்போம் என உறுதி அளித்தது மத்திய அரசு. ஆனால் இப்போது கதையே வேறு.
கொடுக்கவில்லை
டெல்லி, பஞ்சாப், புதுச்சேரி, மத்தியப் பிரதேஷம், கேரளா, ராஜஸ்தான், சத்திஸ்கர், மேற்கு வங்கம் போன்ற எட்டு மாநிலங்கள் மத்திய நிதி அமைச்சரை நேற்று (டிசம்பர் 04, 2019, புதன் கிழமை) சந்தித்து ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையை கொடுக்கச் சொல்லி கேட்டு இருக்கிறார்கள்.
நிதி நிலை
இப்படி அவசர கதியில் மத்திய அரசிடம் தங்களின் ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையை கறாராக பேசி வாங்க என்ன காரணம் என்று கேட்டால்... நிதி நிலையை காரணமாகச் சொல்லி இருக்கிறார்கள். ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகை தாமதமாவதால் எல்லா மாநிலங்களும் கையில் நிதி இல்லாமல் தத்தளித்துக் கொண்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
மாதக் கணக்கு
கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையே இன்னும் பல மாநிலங்களுக்கு போய்ச் சேரவில்லை. அது போக, வரும் டிசம்பர் 10, 2019-க்குள் அக்டோபர், நவம்பருக்கான ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையை வேறு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களுக்கு எவ்வளவு பாக்கி
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்துக்கு மட்டும் கணக்கு எடுத்தால்
பஞ்சாப் 4,100 கோடி ரூபாய்
ராஜஸ்தான் 4,100 கோடி ரூபாய்
கேரளா 1,600 கோடி ரூபாய்
மத்தியப் பிரதேசம் 1,500 கோடி ரூபாய்
--மேற்கு வங்கம் 2,168 கோடி ரூபாய் (ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை)
--டெல்லி 3,642 கோடி ரூபாய் (ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை) என ஒரு கணிசமான தொகையை, ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதை இன்னும் மத்திய அரசு கொடுக்கவில்லை.
பஞ்சாப் நிதி அமைச்சர்
மத்திய அரசு சொன்ன படி ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையை மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டும். நிதி அமைச்சரைச் சந்தித்த போது விரைவில் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையை கொடுப்போம் என உறுதி அளித்து இருக்கிறார். ஆனால் எந்த ஒரு காலக் கெடுவையும் சொல்லவில்லை எனச் சொல்லி இருக்கிறார் பஞ்சாப் மாநில அரசின் நிதி அமைச்சர் மன்ப்ரீத் சிங் பாதல்.
டெல்லி புகார்
"மத்திய அரசிடம் போதுமான பணம் இருந்தும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுக்கவில்லை. ஜிஎஸ்டி செஸ் நிதியில் சுமார் 50,000 கோடி ரூபாய் இருக்கிறது" என டெல்லி யூனியன் பிரதேசத்தின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டி இருக்கிறார்.
தடுமாறும் மத்திய அரசு
ஏற்கனவே, மத்திய அரசுக்கு வரும் வரி வருவாய், பெரிய அளவில் அடி வாங்கி இருக்கிறது. நேரடியாக வரும் வருமான வரி, கார்ப்பரேஷன் வரி தொடங்கி, மறைமுக வரியான ஜிஎஸ்டி வரை எல்லாவற்றிலும் ஒரு சரிவு இருப்பதால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு.
விரைந்து செயல்படட்டும்
கூடிய விரைவில் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்தால் நல்லது. இப்படி ஒவ்வொரு மாநிலமும் தன் உரிமையைக் கேட்கத் தொடங்கினால் பின் ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களும், மாநில அரசுகளும் மத்திய அரசை ஒரு வழி செய்துவிடுவார்கள். அரசு விரைந்து செயல்படும் என நம்புவோம்.