சீனாவில் உருவாகியிருக்கும் மக்கள் போராட்டம் மற்றும் சீன பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியாகி வரும் அறிவிப்புகள் மூலம் சீன பங்குச்சந்தை, கமாடிட்டி சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், ஆசியச் சந்தையில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும் இந்தியாவில் அதிகப்படியான முதலீட்டு உடன் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 62701.4 புள்ளிகளைத் தொட்டது, இதேபோல் நிஃப்டி 18,614.25 புள்ளிகளைத் தொட்டு வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இன்றைய உயர்வுக்கு அடிப்படை காரணம் என்ன..? சீனாவில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் மூலம் இந்தியா பலன் அடைவது ஏன்..?
மும்பை பங்குச்சந்தை
திங்கட்கிழமை வர்த்தகத்தில் காலை துவக்கம் முதலே பெரும்பாலான பங்குகள் உயர்ந்தன, குறிப்பாகப் புளூ-சிப் பங்குகள் தடாலடி உயர்வால் சென்செக்ஸ் வரலாற்று உச்சத்தைத் தொட பெரிய அளவில் உதவியது. சீனாவில் தற்போது மக்களை வாட்டி வதைத்து வரும் கடுமையான ஜீரோ-கோவிட் கொள்கைகளுக்கு எதிராக முக்கியச் சீன நகரங்களில் நடந்த மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிந்தது.
கோவிட்-19 கட்டுப்பாடுகள்
கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகள் மூலம் பல நகரங்களில் சுமார் 100 நாட்களாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஆனாலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை, தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
போராட்டங்கள்
இது தொடர்பாகச் சீனாவில் எழுந்த போராட்டங்கள் மூலம் அந்நாட்டின் கமாடிட்டி சந்தை, பங்குச்சந்தை சந்தை முக்கிய வர்த்தகப் பொருட்களுக்கான டிமாண்ட் ஆகியவை பெரிய அளவில் சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகளில் இதன் தாக்கம் பரவலாகக் காணப்பட்டது.
கச்சா எண்ணெய்
இதேவேளையில் உலகின் முன்னணி கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மட்டும் அல்லாமல் டிமாண்ட், உற்பத்தி, வர்த்தகம், ஜிடிபி, வளர்ச்சி ஆகிய அனைத்தும் சரிய உள்ளது திட்டவட்டமாகத் தெரிகிறது.
விலை சரிவு
இந்த நிலையில் தான் கச்சா எண்ணெய் பியூச்சர் ஒரு பீப்பாய்க்கு 2 டாலருக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததாலும், இந்தியாவுக்குப் பிற நாடுகளைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாலும், இந்திய பங்குச்சந்தை இன்று ஆசிய சந்தைக்குத் தலைகீழாக மாறி செயல்பட்டு முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது.
நிஃப்டி குறியீடு
கச்சா எண்ணெய் விலை சரிவு இந்தியா போன்று அதிகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஜாக்பாட் ஆகும். இன்றைய வர்த்தகத்தில் நிப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 100, நிஃப்டி ஆயில் அண்ட் கேஸ் குறியீடு ஆகியவை 1 - 1.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது.
சென்செக்ஸ் குறியீடு
இன்று மதிய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.28 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் நெஸ்லே, ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, பஜாஜ் பின்சரவ் ஆகியவை 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
சரிவு
இதேவேளையில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாக்டர் ரெட்டி, எஸ்பிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக், மாருதி சுசூகி ஆகியவை சரிவை சந்தித்துள்ளது.
ஐபோன் தொழிற்சாலை
இதேவேளையில் சீனாவில் இருக்கும் ஐபோன் தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆப்பிள் சுமார் 60 லட்சம் போன்களை இழந்துள்ளது. இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை 3 டாலர் வரையில் சரிந்துள்ளது.