உலக நாடுகளை மிரட்டி வரும் மின்சாரப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலை உயர்வு பிரச்சனை தற்போது இந்தியாவிலும் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே அதிகளவிலான மின்வெட்டு இருக்கும் நிலையில் தற்போது குஜராத் மாநிலத்திலும் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கொரோனா தொற்று இந்தியாவில் உச்சம் அடைந்த போது எந்த அளவிற்குத் தொழிற்சாலைகளில் பாதிப்பு இருந்ததோ அதே அளவிற்குத் தற்போது பிரச்சனை வெடிக்கும் எனத் தெரிகிறது.
நிலக்கரி பிரச்சனை
இந்தியாவில் உருவாகியுள்ள நிலக்கரி பிரச்சனை கடுமையான மின்சாரப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது, சில நாட்களுக்கு முன்பு இந்திய நிலக்கரி மின்சார ஆலையில் 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது எனக் கூறப்பட்ட வேளையில், இத்துறை அமைச்சர் போதுமான நிலக்கரி உள்ளது, பற்றாக்குறை நிலையை வரைவில் தீர்க்கப்படும் என அறிவித்திருந்தார்.
கையை மீறிச் சென்றுள்ளது
ஆனால் தற்போது நிலைமை கையைமீறி சென்று உள்ளதாகவே தெரிகிறது. பொதுவாகவே எரிபொருள் விலை அதிகரித்தால் உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கும். ஆனால் இங்குத் தொழிற்சாலைக்கு மிகவும் முக்கியமாக இருக்கும் மின்சாரமே பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் தொழிற்சாலைகள் அதிகப் பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளது.
கலர் மற்றும் கெமிக்கல் விலை
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் எரிபொருள் பிரச்சனை உருவாகியுள்ளது, இதேவேளையில் கலர் மற்றும் கெமிக்கல் விலை தாறுமாறாக அதிகரித்துள்ள காரணத்தால் நவம்பர் மாதம் முழுவதும் - சூரத் பகுதியில் இருக்கும் டையிங் மற்றும் பிரின்டிங் மில்-லை மொத்தமாக மூட திட்டமிடப்பட்டு உள்ளது.
தொழிற்சாலை மூடல்
வெள்ளிக்கிழமை தென் குஜராத் டெக்ஸ்டைல் பிராசசிங் அசோசியேஷன் அமைப்பு நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு ஆலோசிக்கப்பட்டு விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் பெரும் பிரச்சனையாக வெடிக்கும்.
இடம்பெயர்ந்த ஊழியர்கள்
கடந்த வருடம் கொரோனா தொற்றின் போது பிற மாநில ஊழியர்கள் இடம்பெயர்ந்த போது சூரத் தொழிற்சாலைகள் சந்தித்த அதே பிரச்சனை தற்போது மீண்டும் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. சீனாவிலும் மின்சாரப் பற்றாக்குறையால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டையிங் மற்றும் பிரிண்டிங் மில்
குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியில் இருக்கும் டையிங் மற்றும் பிரிண்டிங் மில்கள் அனைத்தும் பாயிலர் பயன்படுத்துகிறது. இந்தப் பாயிலர்களை ஸ்டீம் உற்பத்தி செய்ய நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதில் பெரும்பாலான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தான்.
நிலக்கரி விலை
உலகம் முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள காரணத்தால் இதன் விலை சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 15 நாட்களுக்கு முன்பு ஒரு டன் நிலக்கரி 4000 முதல் 5000 ரூபாய் வரையில் இருந்தது. தற்போது இதன் விலை 14,000 ரூபாயில் இருந்து 15000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் லிக்னைட் நிலக்கரி விலை 5000 ரூபாயில் இருந்து 15000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நிலக்கரி பயன்பாடு
பொதுவாக ஒரு டெக்ஸ்டைல் தொழிற்சாலையில் ஒரு நாளுக்கு 30 முதல் 35 டன் அளவிலான நிலக்கரி பயன்படுத்தப்படும். மேலும் சூரத் தொழிற்சாலையில் பயன்படுத்தும் நிலக்கரி அனைத்தும் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
சந்தை பாதிப்பு
இந்த அதிகப்படியான விலையில் தொழிற்சாலையை இயக்கினால் உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் உயரும். இது சந்தையை பெரிய அளவில் பாதிக்கும் என்பதாலேயே தென் குஜராத் டெக்ஸ்டைல் பிராசசிங் அசோசியேஷன் அமைப்பு நடத்திய கூட்டத்தில் நவம்பர் மாதம் முழுக்க டையிங் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகளை மூட பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.