இந்தியாவில் ஐடி துறை உட்படப் பல துறைகளில் வேலைவாய்ப்பும், திறன் வாய்ந்த ஊழியர்களுக்குமான டிமாண்ட் அதிகளவில் இருக்கும் காரணத்தால் நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஐடித் துறையில் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களிலும் ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் காரணத்தால் புதிய திட்டங்களைக் கையில் எடுக்க முடியாமல் பல திட்டங்கள் தேக்கத்தில் உள்ளது.
ஊழியர்களுக்கு டிமாண்ட்
சந்தையில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் அனைத்து நிறுவனங்களும் விரைவாகப் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காரணத்தால் வேக வேகமாக ஊழியர்களைத் தேடி நியமித்து வருகிறது.
நோட்டீஸ் ப்ரீயட்
இந்தப் பணியில் பெரும் தடையாக இருப்பது ஒரு ஊழியரின் நோட்டீஸ் ப்ரீயட் தான், அதாவது ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது ஒரு, இரண்டு அல்லது 3 மாதம் வரையில் முன் அறிவிப்பு விடுத்த பின்பு தான் புதிய நிறுவனத்தில் சேர முடியும்.
நோட்டீஸ் ப்ரீயட்-க்கான தொகை (Buyout)
ஆனால் சந்தையில் ஊழியர்களுக்கான டிமாண்ட் ஆதிகமாக இருக்கும் காரணத்தால் புதிதாக வேலைவாய்ப்பைக் கொடுக்கும் நிறுவனங்கள் ஊழியரின் நோட்டீஸ் ப்ரீயட்-க்கான தொகையைச் செலுத்திவிட்டு உடனடியாக ஊழியரை பணியில் சேர்த்து வருகிறது. இது ஊழியர்களுக்கும் சரி, புதிதாக வேலையைக் கொடுக்கும் நிறுவனத்திற்கும் சரி ஜாக்பாட் ஆக உள்ளது.
18 சதவீத ஜிஎஸ்டி வரி
இப்படி ஊழியரின் நோட்டீஸ் ப்ரீயட்-க்கான தொகையைச் செலுத்தும் போது 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் சேர்த்துச் செலுத்த வேண்டும் என்ற புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. இதனால் நோட்டீஸ் ப்ரீயட்-க்கான தொகையைச் செலுத்தும் ஊழியர்களுக்கும் சரி, நிறுவனத்திற்கும் சரி கூடுதல் சுமை உருவாகியுள்ளது.
பாரத் பெட்ரோலியம்
சமீபத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பாரத் ஓமன் ரிபைனரி நிறுவனத்தின் தொடர்பாக நடந்த ஒரு வழக்கில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி பிரிவின் அத்தாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் அறிவிப்பின் படி நிறுவனம் செலுத்தும் ஊழியரின் டெலிபோன் பில், நிறுவன ஊழியரின் குரூப் இன்சூரன்ஸ் மற்றும் நோட்டீஸ் பிரியட்-க்கான சம்பள பேமெண்ட் ஆகிய அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிறுவனம் ஊழியருக்கு அளிக்கும் சேவை
இதில் நோட்டீஸ் பிரியட்-ஐ குறைந்த காலத்தில் முடிக்கும் பொருட்டு ஊழியர் செலுத்தும் notice pay என்பது, நிறுவனம் ஊழியருக்கு அளிக்கும் ஒரு விதமான சேவை, இதற்குக் கட்டாயம் ஜிஎஸ்டி வரி உண்டு. இதன் மூலம் இக்குறிப்பிட்ட சேவைக்கு அந்நிறுவனம் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிக் கட்டாயம் செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி வரிக் கட்டாயம்
எனவே நிறுவனத்தை விட்டு விரைவாக வெளியேறத் திட்டமிடும் ஒரு ஊழியர், நோட்டீஸ் காலத்திற்கான சம்பள தொகையைச் செலுத்துவதோடு அத்தொகைக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியையும் கணக்கிட்டுச் செலுத்த வேண்டும். எனவே நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது முன் கூட்டியே அதைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.