தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் யார் இந்த முறை தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய், சீமான் ஆகியோர் எம்.எல்.ஏ ஆவார்களா என அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். தேர்தலை பொறுத்தவரை வெற்றி வாய்ப்புகளை எல்லாம் கடந்து டெபாசிட் பெறுவது என்பது முக்கியம்.
டெபாசிட் கூடவா பெறவில்லை, என்னது டெபாசிட் இழந்துட்டாரா , டெபாசிட் காலியா என்பது தான் ஒரு வேட்பாளர் தோல்வி என்ற உடன் கேட்கப்படும் கேள்விகளாக உள்ளன. தேர்தலில் டெபாசிட் இழப்பு என்றால் என்ன என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டு 234 தொகுதிகளிலும் 4000க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 234 பேர் மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வார்கள். மீதமுள்ளவர்கள் தோல்வி அடைவார்கள். இவர்களில் சிலர் டெபாசிட் இழப்பார்கள்.

தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர் அதற்காக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும். இதை வேட்பு மனு என அழைக்கிறோம். இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அந்த நபர் குறிப்பிட்டத் தொகையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வைப்புத் தொகையாக (டெபாசிட்) செலுத்த வேண்டும். இதனை தான் டெபாசிட் என அழைக்கிறோம். தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் அனைவருமே இந்த டெபாசிட் தொகை செலுத்தியாக வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் , சட்டமன்ற தேர்தல் என இந்த தொகை மாறுகிறது. சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் நபர் 10,000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதுவே பட்டியலின, பழங்குடியின வேட்பாளர்கள் 5000 ரூபாய் செலுத்தினால் போதும்.
வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு தேர்தல் நடந்து முடிவுகள் வெளியான பிறகு வெற்றி அடைந்தவரை தவிர்த்து மற்ற வேட்பாளர்கள் அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற வேண்டும் என்ற விதி உள்ளது. ஒருவேளை ஆறில் ஒரு பங்கிற்கும் குறைவான வாக்குகளையோ அல்லது சரியாக ஒரு பங்கு வாக்கைப் பெற்றாலோ, அந்த வேட்பாளருக்கு டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படாது. இதையே டெபாசிட் இழப்பு என கூறுகிறோம்.
அதாவது 66,000 வாக்குகள் பதிவாகி இருக்கும் ஒரு தொகுதியில் ஆறில் ஒரு பங்கான 10,000 வாக்குகளையாவது வேட்பாளர் பெற்றிருக்க வேண்டும் அதற்கு ஒரு வாக்கு குறைந்தால் கூட அதனை டெபாசிட் இழப்பு என அழைக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு வேட்பு மனு தாக்கலின் போது டெபாசிட் செய்த பணம் திரும்ப கிடைக்காது. இது தான் டெபாசிட் காலி என சொல்லப்படுகிறது. அதாவது தொகுதியில் சொற்ப வாக்குகளை கூட பெற முடியவில்லை, படுதோல்வி என அர்த்தம்.
தேர்தலில் முடிவுகள் வெளியான பிறகு அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்த வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை வேட்பாளர்களுக்கு திரும்ப வழங்கப்படும். தேர்தல் ஆணையத்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் பணம் திரும்ப வழங்கப்படும். மேலும், வேட்புமனுவை திரும்பப் பெறும் கடைசி தேதிக்குள் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றாலும் டெபாசிட் பணம் திருப்பி கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications


