ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உச்சத்திலேயே இருப்பதால் அந்நிய செலாவணி கையிருப்பை சேமிக்க மக்கள் ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து பொதுமக்கள் தங்கம் வாங்குவதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.
இறக்குமதி வரி உயர்வால் தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்தால் பொதுமக்கள் தங்கம், வெள்ளி வாங்குவதை குறைப்பார்கள். இதனால் இறக்குமதியும் குறையும் எனவே நம் கைவசம் இருக்கக்கூடிய அமெரிக்க டாலரை அத்தியாவசிய பொருளான கச்சா எண்ணெய் வாங்குவதற்கு சேமித்து வைக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது. இத்தகைய சூழலில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு தங்கம் ,வெள்ளி , நகை வியாபாரிகள் சம்மேளனம் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இது குறித்து 85 நகைக்கடை சங்கங்களின் கூட்டமைப்பான தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளனத்தின் தலைவர் சபரிநாதன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி இருக்கிறார். அதில் அந்நிய செலாவணியை பாதுகாக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை எனக் கூறியிருக்கிறார். அதற்காக தங்கம் போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை அரசு 6லிருந்து 15 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. 2027 மார்ச் 31ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக நகை விற்பனையாளர்கள் சங்கங்கள் துணை நிற்கின்றன என சுட்டிக்காட்டி இருக்கிறார். அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தின் நகைக்கடை உரிமையாளர்கள் தங்க நாணயம் விற்பனையை உடனடியாக நிறுத்துகிறோம் என கூறியிருக்கிறார். அதேபோல தங்க சேமிப்பு திட்டங்கள் பிற ஊக்குவிப்பு திட்டங்களை விளம்பரப்படுத்தி மக்களை ஈர்ப்பது தவிர்க்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். இது போன்ற எங்கள் தரப்பின் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் தங்கம் மற்றும் வெள்ளி நுகர்வை குறைக்க உதவும் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும் தங்க நகை வர்த்தகத்தை சார்ந்து வாழக்கூடிய ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தவும் இரண்டு நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதன்படி தங்கத்தை உலோக வடிவிலேயே சேமிக்க கூடிய கோல்டு ஈடிஎஃப் மற்றும் டிஜி கோல்டு போன்ற திட்டங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தங்கம் இறக்குமதியாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து புல்லியன் டீலர்களும் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கு மட்டுமே தங்கத்தை விற்க வேண்டும் வேறு யாருக்கும் விற்க கூடாது என்றும் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நெருக்கடியில் இருந்து நாம் மீண்டு வருவோம் இன்னும் வலிமையாக உருவெடுப்போம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
தங்கம் விலை ஏறியதை தொடர்ந்து தங்க நகைகளுக்கு கூடுதல் செய்கூலி சேதாரம் செலுத்த வேண்டும் என்பதால் பரிசு வைப்பது உள்ளிட்டவற்றுக்கு தங்க நாணயங்களை தான் மக்கள் வாங்குகிறார்கள். உதாரணமாக 2 கிராம் அதாவது கால் பவுன் நகை வாங்கும் போது ஒரு கிராம் விலை 15,000 ரூபாய் என்றால் தங்கத்திற்கே 30,000 ரூபாய் கூடுதலாக 3% ஜிஎஸ்டி, 15%க்கும் மேல் செய்கூலி சேதாரம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். இதுவே நகை என்றால் இந்த 15% செய்கூலி , சேதாரம் இருக்கும், நாணயங்களுக்கு 1-4% வரை தான் இருக்கும். ஆனால் நகைக்கடை நிறுவனங்கள் இந்த நெருக்கடியான சூழலில் தங்க நாணய விற்பனையை நிறுத்துவதாக அறிவித்திருப்பது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications

