முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் பிரதான திட்டங்களுள் ஒன்றாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
தவெக சார்பாக பெண்களின் வாக்குகளை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. மாதம் தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் நிதி, அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம், திருமணத்தின் போது தங்கம் மற்றும் பட்டுப்புடவை சீர் வழங்கும் திட்டம், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் சீர் திட்டம் ஆகியவை இவற்றில் முக்கியமானவை.

இந்த திட்டங்கள் எப்போது அமலுக்கு வரும் என கோடிக்கணக்கான தமிழ்நாட்டு பெண்கள் காத்திருந்த நிலையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும். முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார் என இரு வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது.
தற்போது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிராம் எடையுள்ள 22 கேரட்/916 தரம் கொண்ட 4,41,667 தங்க மோதிரங்களை வாங்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் 4,41,667 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.
முன்னதாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த அரசாணையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கவுரவிக்கும் முகமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறி இருந்தது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழர் பாரம்பரியத்தில், "தாய்மாமன் சீர்" என்ற மரபின்படி, தமிழ்நாடு முதலமைச்சர், தாயின் சகோதரர் புதிதாக பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் என தெரிவித்திருந்தது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக முதலமைச்சர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதிக்கே முன் தேதியிட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கினாலும் ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தில் தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜோஸ் ஆலுக்காஸ் நகை விற்பனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முதலமைச்சர் விஜயை ஜூன் மாதம் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தான் அரசு தங்க மோதிரம் திட்டதை அறிவித்ததாக சர்ச்சை எழுந்தது.


Click it and Unblock the Notifications

