சினிமா ரசிகர்கள் படிப்படியாக திரையரங்குகளில் இருந்து ஓடிடி தளங்களுக்கு மாறி வரும் கால கட்டம் இது. முன்பை போல தியேட்டர்களுக்கு சென்று ஒரு படத்தை கண்டு ரசிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் முதலமைச்சர் விஜய்யின் ஒரு உத்தரவு தியேட்டர் உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை தந்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே 16 ஆம் தேதி திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்துத் திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர் என கூறியுள்ளார்.

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ் திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'சி' படிவ உரிம நிபந்தனை 14-ஏ-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. உள்ளூர் பண்டிகை நாள்கள் அல்லது பொது விடுமுறை நாள்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சிக்கு அனுமதிக்கும் உரிமம் வழங்கும் மாவட்ட ஆட்சியர் , மாநகர காவல் ஆணையர் வசம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
திரைத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர் தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார். இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் , உள்ளூர் பண்டிகை நாள்கள், பொது விடுமுறை நாள்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இனி தியேட்டர் உரிமையாளர்கள் இதற்காக உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதியை தனியாக பெறத் தேவையில்லை என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தினசரி ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்ற இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான வருவாயை ஈட்டி தரக்கூடிய ஒரு அறிவிப்பாக மாறி இருக்கிறது. ஏனெனில் ஒரு சராசரி பட்ஜெட்டிலான தமிழ் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகிறது என வைத்துக்கொள்வோம் 200 இருக்கைகள் கொண்ட ஒரு ஹாலில் 50 சதவீதம் இருக்கைகள் சராசரியாக நிரப்பப்படுகின்றன ஒரு டிக்கெட்டின் விலை 200 ரூபாய் என வைத்துக் கொண்ள்வோம்.

ஒரு நாளைக்கு கூடுதலாக ஒரு காட்சியை திரையிடுவதன் மூலம் சராசரியாக 20 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். அப்படி என்றால் முதல் ஏழு நாட்களுக்கு இதனை கணக்கிடும்போது கூடுதலான ஒரு காட்சி மூலம் மட்டுமே 1.4 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுவே பெரிய பட்ஜெட் திரைப்படம் 2000க்கும் அதிகமான ஸ்கிரீன்களில் வெளியாகிறது என்றால் இந்த வருமானம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். அந்த வகையில் முதலமைச்சர் விஜயின் இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ,விநியோகஸ்தர்களுக்கு வரப்பிரசாதமாக மாறி இருக்கிறது.
முதல் ஏழு நாட்களில் கிடைக்கும் கலெக்ஷனில் தான் அந்த திரைப்பட தயாரிப்பாளர் பெரும்பாலான பங்கினை பெறுகிறார் மேலும் இந்த முதல் ஏழு நாளில் அந்த திரைப்படத்திற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்துதான் அந்த படத்திற்கான ஓடிடி வெளியிட்டு உரிமம் ,இசையுரிமை மற்றும் சாட்டிலைட் உரிமங்களுக்கான கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்த முதல் ஏழு நாட்கள் கூடுதலாக ஒரு காட்சி எனும் போது படத்தின் வசூல் அளவு அதிகரிக்கும் இது படத்திற்கான மற்ற வெளியீட்டு உரிமங்களின் கட்டணத்தை உயர்த்தும். அந்த வகையில் தயாரிப்பாளர் தரப்புக்கு இது மிகச் சிறந்த லாபத்தை தரும்.
இந்த அறிவிப்பின் மூலம் ஒரே திரை வைத்திருக்கக்கூடிய சிறு சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் செயல்படக்கூடிய திரையரங்குகள் நிச்சயம் பலன் பெறும். ஏனெனில் நகரப்புறங்களில் இருக்கக்கூடிய திரையரங்குகளை விட இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கக்கூடிய ஒரே ஸ்கிரீன் கொண்ட திரையரங்குகள் தான் அண்மைக்காலமாக செயல்பட முடியாமல் திணறுகின்றன. கூடுதலாக ஒரு ஷோ என்பது இவர்களுக்கு மக்கள் வருகையை அதிகரிக்கும் சற்றே வருமானத்தையும் பெருக்கும். கூடிய விரைவில் விஜயின் ஜனநாயகன் திரைப்படமும் வெளியிடப்பட இருப்பதால் இந்த ஐந்து காட்சிகள் அனுமதி என்ற உத்தரவு அந்த திரைப்படத்திற்கும் பொருந்தும்.


Click it and Unblock the Notifications

