தமிழ்நாட்டில் பெண்கள் சுய தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் வெளியான இந்த அறிவிப்புக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தலைமையிலான அரசு அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பெண்களின் வாக்குகள் தான். பெண் வாக்காளர்களுக்கு தந்த வாக்குறுதிகளை விஜய் அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை (MSME) விரிவுபடுத்தும் வகையிலும் 8 மாவட்டங்களில் பிரத்யேகமாக 9 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் மூலமாக 237 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட உள்ளன. இவை பெண் தொழில்முனைவோருக்கான பிரத்தியேக தொழிற்பேட்டைகளாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதன்படி,
சென்னை - மாதவரம்
மதுரை மாவட்டம் - திருவாதவூர்
திருச்சி மாவட்டம் - சூரியூர் மற்றும் மணப்பாறை
சேலம் மாவட்டம் - பெரியசீரகப்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் - மின்னூர்
தூத்துக்குடி மாவட்டம் - சங்கரபேரி
திருநெல்வேலி மாவட்டம் - நரசிங்கநல்லூர்
தஞ்சாவூர் மாவட்டம் - பாளையப்பட்டி
ஆகிய 9 இடங்களில் பெண் தொழில் முனைவோருக்கு பிரத்தியேக தொழிற்பேட்டைகள் அமைய உள்ளன. தமிழ்நாட்டில் ஏற்கனவே சேலம், திருச்சி, மதுரை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்காக 5 பிரத்யேக தொழிற்பூங்காக்கள் செயல்பாட்டில் உள்ளன.
இந்த தொழிற்பூங்காக்களில் பெண்கள் தங்களின் தொழில்களை நிறுவ சலுகைகள் வழங்கப்படுகின்றன. தொழில்துறையில் பெண்கள் பங்களீப்பு அதிகரிக்க வேண்டும் வெறும் தொழிலாளர்களாக மட்டுமில்லாமல் முதலாளிகளாகவும் பெண்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.பெண்கள் சுயதொழில் தொடங்க பயிற்சி தருவது, சொந்தமான நிறுவனங்களை நடத்த கடன் உதவி அளிப்பது என்பன உள்ளிட்ட உதவிகள் இதில் கிடைக்கும்.
இது தவிர செயற்கை நுண்ணறிவு , டீப் டெக்னாலஜி மற்றும் நிதி தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் புத்தாக்கத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக நிதி நிறுவனம் ஒன்றையும் தமிழக அரசு ஏற்படுத்தவுள்ளது.
இது மட்டுமில்லாமல், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மருந்து பூங்கா அமைக்கப்படும், திருச்சி மாவட்டம் சூரியூரில் மருத்துவ உபகரண தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும், விழுப்புரத்தில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.பாரம்பரிய கைவினைஞர்களை ஊக்கப்படுத்த தஞ்சாவூரில் 10 கோடி ரூபாய் செலவி கைவினை சுற்றுலா கிராமம் (Craft Tourism Village) ஒன்றும் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

