தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பல்வேறு எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது. இந்த முறை தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதுதான் ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று நோக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்டோர் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் உள்ளனர். இது தவிர ஆயிரக்கணக்கான சுயேச்சை வேட்பாளர்களும் இந்த முறை போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து தங்களின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க உள்ளார்கள். இந்த தேர்தலில் மக்கள் சவுகரியமாக வந்து வாக்களித்து செல்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது. குறிப்பாக பெண்கள் மட்டுமே கையாளக்கூடிய வகையிலான பிங்க் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களிலும் பலூன்கள் கட்டி வாக்காளர்களை வரவேற்க அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. வாழை தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் வந்து சௌகரியமான முறையில் வாக்களித்து செல்லவும் பிரத்தியேகமான முறையில் வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கோடை வெயில் இருப்பதால் வாக்காளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும் வகையில் ஆங்காங்கே பந்தல்களும் போடப்பட்டிருக்கின்றன. உடன் வரக்கூடிய குழந்தைகள் விளையாட ஏதுவாக கிட்ஸ் பிளே ஏரியாவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆங்காங்கே செல்ஃபி பூத்துகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
100% வாக்குப்பதிவு எட்டி விட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்கிறது. காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது. வெயில் காலமாக இருப்பதால் முடிந்த அளவு காலையிலேயே ஏராளமானவர்கள் வந்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடத்தப்படும். எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்த நிலையில் சுமார் 40 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதால். ஏற்கனவே வாக்களித்து வருபவர்கள் தவறாமல் இந்த முறை வாக்களித்தாலே தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் 85ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அப்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் மூன்று அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் உடன் இருப்பார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிக்கு உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையமே வெளியிடும். பொதுமக்களைப் பொருத்தவரை பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை , உள்ளிட்ட தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கக்கூடிய 12 அடையாள ஆவணங்களில் ஒன்றை கையில் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
வாக்களிக்கும் அறைக்குள் செல்போன்கள் அனுமதி கிடையாது எனவே அங்கே சென்று புகைப்படம் எடுக்க முயல்வது, ரீல்ஸ் எடுப்பது உள்ளிட்டவற்றை செய்தால் காவல்துறை நடவடிக்கைக்கு கூட ஆளாக நேரிடலாம். எனவே இளைஞர்கள் இதுபோன்ற முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. அதேபோல வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாசனை திரவியங்களை தடவி வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை முறைகேடாக கண்டறிய சிலர் முயற்சி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
வாக்களித்து வந்த பின்னர் இந்த கட்சிக்கு வாக்களியுங்கள் என யாரிடமும் பிரச்சாரம் செய்ய கூடாது.வாக்குசாவடிக்கு முன்னர் கும்பல் கூடுவது அங்கே வர கூடிய வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்வது, பணம் பட்டுவாடா செய்வது உள்ளிட்டவையும் உங்களுக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும். மக்கள் முயன்ற அளவு காலையிலேயே சென்று வாக்களித்தால் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். நீங்கள் வாக்களித்தவுடன் பீப் என்ற ஒலி வருகிறதா என கவனிக்க வேண்டும், அதேபோல நீங்கள் வாக்களித்த வேட்பாளர் விவரம் தெளிவாக விவிபேட் இயந்திரத்தில் காண்பிக்கப்படும். அதில் காட்டுவது தவறாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.


Click it and Unblock the Notifications


