இந்தியாவில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக நுகர்வோர் சந்தை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் FMCG துறை பெரு நிறுவனங்களுக்கு முக்கிய இலக்காக மாறியுள்ளது.
இதன் எதிரொலியாக நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான டாடா, FMCG துறையில் பெரிய அளவிலான வர்த்தகத்தை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் டாடா குளோபல் பிவரேஜஸ் மற்றும் டாடா கெமிக்கல் நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் வர்த்தகத்தை ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலம் தற்போது டாடாவின் குழுமத்தின் டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் லிமிடெட் முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கிய இலக்காக மாறியுள்ளது.
TCPL
டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது டி, காபி, தண்ணீர், உப்பு, பருப்பு வகைகள், மசாலா வகைகள் மற்றும் பாக்கெட் உணவுகள் முக்கிய வர்த்தகப் பொருளாக இருப்பதால், இந்தியாவில் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையில் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியும். இதேபோல் வெளிநாட்டு வர்த்தகத்தில் எங்களுக்கு மிகப்பெரிய நெட்வொர்க் மற்றும் அடித்தளம் இருப்பதால் வெளிநாட்டிற்கு TCPL வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும் எனச் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் குழுமத்தின் மொத்த உணவு மற்றும் குளிர்பானம் வர்த்தகத்தை TCPL உடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலம்
TCPL நிறுவனம் இந்தியாவின் அடுத்த பெரிய FMCG நிறுவனமாக மாற அனைத்து விதமான வாய்ப்புகளும் உள்ளது. குறிப்பாக நெஸ்லே இந்தியா, பிரிட்டானியா போன்ற நிறுவனங்களுக்கும் போட்டி நிறுவனமாக வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி அனைத்தும், TCPL எப்படிப் புதிய பிரண்டுகளை அறிமுகம் செய்கிறது, தற்போது இருக்கும் பிராண்டு பொருட்களின் வர்த்தகத்தை எப்படியெல்லாம் வர்த்தகம் விரிவாக்கம் செய்கிறது என்பதில் தான் இருக்கிறது.
30 லட்சம் கோடி ரூபாய்
இந்தியாவின் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நுகர்வோர் வர்த்தகச் சந்தையில் தற்போது ஜியோமார்ட், அமேசான், பிளிப்கார்ட், பியூச்சர் குரூப், பிக்பேஸ்கட், ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற பல ரீடைல் விற்பனையாளர்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ள காரணத்தால் FMCG துறை உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறுகிறது.
வளர்ச்சி
டிசிஎஸ், டைட்டன், டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு அடுத்தாக 35,500 கோடி ரூபாய் மதிப்புடன் டாடா குழுமத்தின் 4வது பெரிய சந்தை மதிப்புடைய நிறுவனமாக TCPL நிறுவனம் இருக்கிறது.
மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வர்த்தகச் சரிவில் இருந்து TCPL, வெறும் 3 மாத காலத்தில் 70 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த நிதியாண்டில் TCPL வருவாயில் 33 சதவீதமும் EBITDAவில் 56 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் 1300 கோடி ரூபாய் கையில் இருப்பாக வைத்துள்ளது TCPL.
50,000 கோடி
சந்திரசேகரன் தலைமையில் சரியான திட்டமிடல் உடன் டிஜிட்டல் வர்த்தகச் சந்தை உதவியுடன், வர்த்தக வளர்ச்சிக்காகப் போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றினால் அடுத்த சில வருடத்தில் TCPL 50,000 கோடி ரூபாய் மதிப்பீட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.