இந்தியாவின் மாபெரும் நிறுவனமான டாடா குழுமம், தனது புதிய இ-காமர்ஸ் வர்த்தகத்திற்காக, சாத்தியமான முதலீடுகளுக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இந்த இ-காமர்ஸ் தளமானது அமேசான்.காம், ஜியோமார்ட் போன்று இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது புதியதாக இ-காமர்ஸ் துறையில் புகுந்த முகேஷ் அம்பானி, ஏற்கனவே வெற்றியாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாளர்களாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சன்ஸ் நிறுவனம்
கடந்த ஜூன் மாதத்திலேயே டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எஸ் லட்சுமி நாரயணன், இ -காமர்ஸ் துறை வலுவடையும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் 113 பில்லியன் டாலர் மதிப்புடைய டாடா குழும நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனம், காபி டூ கார்கள் வரை கூட்டு வைத்திருக்கும் ஒரு மாபெரும் நிறுவனமாகும்.
டிஜிட்டல் தளங்களை ஒண்றினைக்க திட்டம்
இந்த நிறுவனம் தான் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட, பல முதலீட்டாளர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கையினை இந்த நிறுவனம் வெளியிடவில்லை. மேலும் இந்த மேற்கண்ட இந்த தகவலின் படி, இந்த புதிய வணிகத்தினை உருவாக்கும் பொருட்டு, டிஜிட்டல் சொத்துக்களை ஒண்றினைக்க இந்த குழு திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களை தட்டி பறிக்கலாம்
டாடா குழுமத்தினால் ஆரம்பிக்கப்படும் இந்த புதிய இ-காமர்ஸ் தளத்தில் நுகர்வோர் பொருட்கள் மற்றும் பானங்கள், நகைகள், ரிசார்ட்ஸ் உள்ளிட்ட பல சேவைகளையும் வழங்க உள்ளதாகவும் தெரிகிறது. சொல்லப்போனால் இந்தியாவில் புதிய இ-காமர்ஸ் நிறுவனமான ஜியோமார்டுடன் இது போட்டியிடலாம். அதோடு அமேசான், பிளிப்கார்டின் சந்தையினை இது தட்டி பறிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு குறித்து பேச்சு வார்த்தை
முன்னதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் , முகேஷ் அம்பானி, இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான உருவெடுக்க பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பெரிய கூட்டாளர்களுடன் பெரிய பெரிய முதலீடுகளை திரட்டியுள்ளார். இதற்கிடையில் தான் தற்போது டாடா குழுமமும் இதுகுறித்தான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த பேச்சு வார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடனையும் குறைக்க உதவும்
வெளிப்புற முதலீட்டாளர்களைக் கொண்டு வருவது டாடாவின் டிஜிட்டல் நம்பகத் தன்மையைக் கொடுக்கும். அதே வேளையில் கொரோனாவால் பின்னடைவை சந்தித்துள்ள இந்த நிறுவனத்தின் கடனையும் குறைக்க இது உதவும். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர கடன் ஜூன் 30 நிலவரப்படி, 14 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவார் நிறுவனத்தினை வைத்திருக்கும் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர வாகன கடன் மதிப்பானது 6.5 பில்லியன் டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் 480 பில்லியன் ரூபாயாகும்.
சில நுகர்வோர் வணிகம் உண்டு
டாடா குழும நிறுவனம் ஏற்கனவே சில நுகர்வோர் வணிகங்களைக் கொண்டுள்ள நிலையில், அவற்றில் பல ஆன்லைன் இருப்பைக் கொண்டுள்ளன. இதில் தனீஷ்கின் நகை கடைகள், டைட்டன் வாட்ச் ஷோரூம்கள், ஸ்டார் பஜார் சூப்பர் மார்கெட்டுகள், தாஜ் ஹோட்டல்களின் சங்கிலி மற்றும் இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் ஒரு கூட்டு முயற்சி ஆகியவை அடங்கும்.
ஒருங்கிணைப்பதே நோக்கம்
தற்போது துண்டாக சிதறிக் கிடக்கும் இந்த நிறுவனங்களை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கம். ஆக இந்த உந்துதலின் எதிரொலி தான் இ-காமர்ஸ் நிறுவனமாக உருவெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கடந்த மாதம் ப்ளூம்பெர்க் நியூஸ் 2020ம் ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த புதிய நிறுவனங்கள் தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.